பள்ளிகளில் புர்கா அணியத் தடை விதிக்க இத்தாலி பிரதமர் மெலோனி திட்டம்!
இத்தாலி பள்ளிகளில் புர்கா அணிவதற்குத் தடை விதிக்க அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி திட்டமிட்டுள்ளார்.
இத்தாலி பள்ளிகளில் புர்கா அணிவதற்குத் தடை விதிக்க அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி திட்டமிட்டுள்ளார்.
இத்தாலி பள்ளிகளில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது மற்றும் புர்கா, நிகாப் போன்ற உடைகளை அணிவதைத் தடை செய்வது போன்ற நடவடிக்கைகளை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்தார்.
மேலும், வெளிநாட்டு மாணவர்களின் பெற்றோர் பள்ளி அமைப்புகள் சார்ந்து ஒன்றிணைய கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதால், அவர்களுக்கு இத்தாலிய மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்கும் நடவடிக்கையையும் மேற்கொள்ளவிருப்பதாக மெலோனி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
ரோமில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய மெலோனி, “இத்தாலிக்கு வந்து தங்கள் எதிர்காலத்தை இங்கு உருவாக்க விரும்புவோர் எங்கள் மொழியைக் கற்க வேண்டும். எங்கள் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எங்கள் விதிகளை மதிக்க வேண்டும். அவர்களை வரவேற்க ஒரே முறையான வழி இதுதான்” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், முஸ்லிம் பெண்கள் அணியும் முழு உடலை மறைக்கும் ஆடையான புர்கா மற்றும் கண்களைத் தவிர மற்ற பகுதிகளை மறைக்கும் நிகாப் போன்ற உடைகளுக்குப் பள்ளிகளில் தடை விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த நடவடிக்கைகள் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, சட்டமாக மாறுவதற்கு 60 நாள்களுக்குள் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கும்.
தீவிர வலதுசாரி அரசியல் பின்புலம் கொண்ட மெலோனி, குடியேற்றம் தொடர்பான விவகாரங்களில் தீவிரமான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவர். ஆனால், பிரதமராகப் பணியாற்றியபோது அரசியல் ரீதியாகப் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள அவர், தேசியவாத கண்ணோட்டம் கொண்ட அரசியல்வாதியாக இருந்து, ஐரோப்பிய ஒன்றிய அரசியல்வாதிகளிடையே முக்கிய அங்கீகாரம் பெற்ற தலைவராக மாறியுள்ளார்.
அதேநேரம், அடுத்தாண்டு இத்தாலியில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு முன்னதாக அவரது செல்வாக்கை உயர்த்த ஆர்வமாக உள்ளார். அதனை அடையும் நோக்கில் சில கொள்கைகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
முக்கியமாக, சிறிய மற்றும் நடுத்தர ரக கார்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் மீதான சொத்து வரிக்கு விலக்கு அளித்ததன் மூலம் நடுத்தர மக்களின் வாக்குகளைக் கவரத் திட்டமிட்டுள்ளார்.
இத்தாலியில் இரண்டாம் உலகப் போருக்குப் பின் நீண்ட காலம் தடையின்றி ஆட்சியில் தொடரும் பிரதமராக மெலோனி சமீபத்தில் சாதனை படைத்துள்ளார்.
Italian Prime Minister Giorgia Meloni plans to ban the wearing of the burqa in Italian schools.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.