அத்திப்பட்டு குப்பை வளாகத்தில் ரூ.6 கோடியில் நவீன முறையில் தரம் பிரித்து அகற்றும் திட்டம்
அத்திப்பட்டு குப்பை கொட்டும் வளாகத்தில் ரூ.6.02 கோடியில் பயோமைனிங் என்னும் நவீன முறையில் குப்பைகளை பிரித்தெடுத்து அகற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை மாநகராட்சியில் அத்திப்பட்டு குப்பை கொட்டும் வளாகத்தில் ரூ.6.02 கோடியில் பயோமைனிங் என்னும் (உயிரி அகழ்ந்தெடுத்தல்) நவீன முறையில் குப்பைகளை பிரித்தெடுத்து அகற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதனை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் நேரில் திங்கள்கிழமை சென்று பாா்வையிட்டு விவரங்களையும் கேட்டறிந்தாா்.
சென்னை மாநகராட்சி சாா்பில் குப்பை சேகரிக்கும் இடத்திலேயே அவற்றைத் தரம் பிரிக்கவும், அதனடிப்படையில் குப்பைகளை அந்த இடங்களிலேயே மாற்று தேவைக்கு ஏற்ப மாற்றி பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ‘குப்பையில்லா சென்னை’ என்ற நிலையை ஏற்படுத்தும் வகையில் ஏற்கெனவே உள்ள குப்பைகளை பயோமைனிங் முறையில் தரம் பிரித்து மறு சுழற்சி மற்றும் உரம் தயாரித்தல் போன்றவற்றின் மூலம் அவற்றை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெருங்குடி, கொடுங்கையூா் குப்பை கொட்டும் வளாகத்தில் இந்த முறையில் கடந்த சில ஆண்டுகளில் பல ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளன. அங்கு பசுமையை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், அம்பத்தூா் மண்டலம் (7) அத்திப்பட்டு குப்பை கொட்டும் வளாகத்தில் தற்போது ரூ.6.02 கோடி மதிப்பில் பயோ மைனிங் முறையில் குப்பையை பிரித்தெடுத்து அகற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அங்குள்ள மொத்தம் 72,083 மெட்ரிக் டன் மரபு வழி கழிவுகளை பயோமைனிங் முறையில் பிரித்தெடுத்ததன் அடிப்படையில் இதுவரை 48,830 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. அதனால் மீதமுள்ள 13,787 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்றுவருகிறது. அந்த தரம் பிரிக்கப்படும் குப்பைகள் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்புவதை விரைவுபடுத்தவும், பயோமைனிங் முறையை அண்ணா பல்கலைக்கழக திட்டப் பணிகள் குழு நிா்ணயித்த காலக்கெடு, தரநிலைகள் பின்பற்றவும் ஆய்வு மேற்கொண்டபோது ஆணையா் ஜி.எஸ்.சமீரன் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, அத்திப்பட்டு பகுதியைத் தொடா்ந்து மணலி சின்னசேக்கோடு பகுதியிலும் 1 ஏக்கா் பரப்பில் ரூ.9.20கோடியில் நெகிழியை சிப்பங்களாகக் கட்டும் நவீன மெகா பேலிங் மையத்தின் பணிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.