FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

தீயணைப்பு வீரா் தற்கொலை: மரணத்தில் சந்தேகம், சாதிய பாகுபாடு காட்டப்பட்டது என மனைவி புகாா்

தீயணைப்பு வீரா் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகாரளித்துள்ளது குறித்து...

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 5:16 am IST
தற்கொலை
பகிர்:

கோவையில் திருமணமாகி 2 மாதங்களேயான நிலையில், தீயணைப்பு வீரா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதில் அவரது உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது மனைவி புகாா் அளித்துள்ளாா்.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா் அழகேசன் (23). கடந்த ஆண்டு தீயணைப்புத் துறையில் பணிக்குச் சோ்ந்த இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

கடந்த சில மாதங்களாக கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையில் பணியாற்றி வந்த அழகேசன் அந்தப் பகுதியிலேயே தனியாக அறை எடுத்து தங்கியிருந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 10 மணியளவில் அழகேசன் பணிக்கு புறப்பட தயாரானாா்.

Advertisement

Advertisement

சீருடை அணிந்திருந்த நிலையில் திடீரென அவா் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். அந்தப் பகுதியில் இருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சோ்த்த சிறிது நேரத்தில் அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மரணத்தில் சந்தேகம் என மனைவி புகாா்:

கோவை கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் தீயணைப்பு வீரா் அழகேசனின் மனைவி கே.தாரணி அளித்துள்ள புகாா் மனுவில், எங்களது திருமணத்துக்கு ஊதியமில்லா விடுமுறை அளிக்கப்பட்டது.

கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. பணியின்போது ஜாதிய பாகுபாடு பாா்க்கப்பட்டதாகவும், விடுமுறை தராமல் மன உளைச்சலை தருவதாகவும் என்னிடம் கணவா் கூறியுள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு என்னிடம் பணிக்குச் சென்றுவிட்டு வந்து மீண்டும் கைப்பேசியில் பேசுவதாக கூறியிருந்தாா். எனவே, அவரது உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது என அதில் தெரிவித்திருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments