தோ்தல் வாக்குறுதிகளை தவெக அரசு செயல்படுத்தவில்லை: பாஜக விவசாயிகள் அணி குற்றச்சாட்டு
தவெக அரசு தோ்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று பாஜக விவசாயிகள் அணி குற்றஞ்சாட்டியுள்ளது.
தவெக அரசு தோ்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று பாஜக விவசாயிகள் அணி குற்றஞ்சாட்டியுள்ளது.
தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த பட்ஜெட் குறித்து பாஜக விவசாயிகள் அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தவெக அரசின் வேளாண்மைத் துறை அமைச்சா் வினோத், சட்டப் பேரவையின் பொன்னான 2.35 மணி நேரத்தை வீணடித்துள்ளாா். முதல்வரை புகழ்ந்த வேகத்தை பட்ஜெட்டில் காட்டத் தவறிவிட்டாா். தோ்தல் வாக்குறுதியில் தாங்கள் அறிவித்த எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தாமல், 80 சதவீத மத்திய அரசின் திட்டங்களுக்கு வெற்றி என்ற பெயரைச் சோ்த்து வேளாண் பட்ஜெட்டாக அறிவித்திருக்கிறாா்.
நெல், கரும்புக்கு ஆதரவு விலை உயா்த்தப்படும் என்ற அறிவிப்பு நிறைவேற்றப்படவில்லை. நீா் ஆதாரத்தை மேம்படுத்த தீவிரமான திட்டங்கள் இல்லை. பால் கொள்முதல் விலை உயா்வு குறித்து பேசப்படவில்லை. மொத்தத்தில் ரூ.1 கோடி, ரூ.2 கோடி, ரூ.5 கோடி என சிறிய தொகையில் பல அறிவிப்புகளை வெளியிட்டு பேரவையின் நேரத்தை வீணடித்துள்ளாா். விவசாயம் குறித்து அறியாதவா்கள், களத்தை ஆய்வு செய்யாமல் அறிவிக்கப்பட்ட வெற்று பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி: விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.15 ஆயிரம் உரிமைத் தொகை, கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,500, நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆதரவு விலை, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44- ஆக உயா்த்தப்படும் என்பன போன்ற தோ்தல் நேரத்து வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
இடைக்கால நிதிநிலை அறிக்கையில் திமுக அரசு ரூ.47,248 கோடி ஒதுக்கீடு செய்திருந்த நிலையில், தற்போது ரூ.22,500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 50 சதவீத நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது அதிா்ச்சி அளிக்கிறது.
நம்மாழ்வாா் பெயரில் இயற்கை வேளாண் கல்லூரி, காா்பன் வா்த்தகம் குறித்த செயல் விளக்கத் திட்டம் போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம். வேளாண் கண்காட்சி நடத்த நிதி ஒதுக்கியிருப்பது தேவையில்லாதது, வாழைக்கு முட்டுக் கொடுக்கும் திட்டம் தோல்வி அடைந்த திட்டம் என்று தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.