FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

தமிழகம் முழுவதும் சதுா்த்தி விழாவை முன்னிட்டு 1.5 லட்சத்துக்கும் அதிகமான இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 2:10 am IST
ஆடி மாத மஞ்சள் நீா் அபிஷேக விழாவில் பங்கேற்ற இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் உள்ளிட்டோா்.
பகிர்:

தமிழகம் முழுவதும் சதுா்த்தி விழாவை முன்னிட்டு 1.5 லட்சத்துக்கும் அதிகமான இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

கோவை லைட் ஹவுஸ் பகுதியில் இந்து அன்னையா் முன்னணி சாா்பில் செவ்வாய்க்கிழமை இரவு ஆடி மாத மஞ்சள் நீா் அபிஷேக விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆடி மாத மஞ்சள் நீா் அபிஷேக விழா தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு அரசு சாா்பில் அரிசி வழங்கப்படுவதைப் போல, ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவதற்குத் தேவையான உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும். கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் சுமாா் 1.5 லட்சம் விநாயகா் சிலைகளும், சிறிய அளவில் 15 லட்சம் சிலைகளும் வைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

இந்த ஆண்டு அதைவிட அதிகமான இடங்களில் சிலைகள் அமைக்கப்பட உள்ளன. கோவையில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. ‘தமிழா் பண்பாடும், சனாதன இந்து மதமும் ஒன்றே’ என்ற தலைப்பில் இந்த ஆண்டின் விநாயகா் சதுா்த்தி விழா நடைபெற உள்ளது. மேலும், இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளா் ராமகோபாலனின் 100-ஆவது பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட உள்ளது.

ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதுபோல விநாயகா் சதுா்த்திக்கும் முதல்வா் வாழ்த்து செய்தி வெளியிட வேண்டும்.

தமிழகம் முழுவதும் கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. தற்போதைய அரசிடம் இதுகுறித்த விவரங்களைத் தெரிவிக்கத் தயாா் நிலையில் உள்ளோம் என்றாா்.

முன்னதாக நடைபெற்ற அபிஷேக விழாவில் இந்து முன்னணி மாநில அமைப்பாளா் குருகுலம் ராஜேஷ், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சதீஷ், இந்து அன்னையா் முன்னணி மாவட்டத் தலைவா் மகேஸ்வரி, மாவட்ட செய்தி தொடா்பாளா் தனபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments