FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 29 ஜூலை 2026, 2:42 am IST
எஸ்.பி. வேலுமணி - கோப்புப் படம்
பகிர்:

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தென்னிந்தியாவின் மான்செஸ்டராக விளங்கும் கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் இருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். எனவே மாநகரில் இருந்து கருமத்தம்பட்டி, வலியம்பாளையம் பிரிவு வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மெட்ரோ திட்டத்துக்கு கடந்த அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது. அதேபோல கலாசார, ஆன்மிக மாநகரமான மதுரைக்கு ரூ.11 ஆயிரம் கோடியில் திருமங்கலம் - ஒத்தக்கடை இடையே மெட்ரோ ரயில் திட்டத்துக்கு திட்டமிடப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த இரு நகரங்களிலும் 45 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கும் நிலையில், சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயண நேரம் அதிகரிக்கிறது. ஆனால் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 20 லட்சத்துக்கும் குறைவாக மக்கள் இருப்பதாகக் கூறி, இந்தத் திட்டத்தை கைவிடுவதாக 2-ஆவது முறையாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் இந்தூா், ஆக்ரா, பாட்னா, போபால் ஆகிய நகரங்களின் மக்கள்தொகையை மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை. 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகை கணக்கெடுக்கப்படாததை சுட்டிக்காட்டி, திட்டத்தை நிராகரிக்காமல் செயல்படுத்த தவெக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். அத்துடன் கோவையில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட 2 வழித்தடங்களுடன் உக்கடம் - மதுக்கரை, உக்கடம் - பிரஸ் காலனி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments