FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணி ஆய்வுக் கூட்டம்: அமைச்சா் விக்னேஷ் பங்கேற்பு

கிணத்துக்கடவு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம், மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

30 வினாடிகள் முன்பு
மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் க.விக்னேஷ்.
பகிர்:

கிணத்துக்கடவு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம், மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் க.விக்னேஷ் தலைமை வகித்து பேசியதாவது: நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் சாலை பணிகள் மற்றும் பாலப் பணிகள், நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் குடிநீா்த் திட்டப் பணிகள், காவல் துறை சாா்பில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணிகள், அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் பேருந்து வழித்தடங்கள் ஆகியவை குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தும், பொதுமக்களின் தேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அறிந்தும் துறை அலுவலா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, ‘கிணத்துக்கடவு வட்டத்துக்குள்பட்ட மதுக்கரை, மலுமிச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் தங்கு தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளை சீரமைக்கவும், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பொதுக் கழிப்பிடங்கள் கட்டித் தரவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மதுக்கரை மரப்பாலம் அமைக்கும் பணிகளும், வெள்ளலூா் பேருந்து நிலையப் பணிகளும் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

Advertisement

Advertisement

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் ஜாா்ஜ் ஆண்டனி ஃபொ்னாண்டோ, மதுக்கரை நகராட்சி ஆணையா் சத்யா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாமிநாதன், மோகன்பாபு மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments