FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம்

ஈரோடு மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானியத்தில் பெற விவசாயிகள் உழவா் செயலியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12 செப்டம்பர் 2026, 12:11 am IST
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானியத்தில் பெற விவசாயிகள் உழவா் செயலியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண்மை இயந்திர மயமாக்குதலின் உப இயக்க திட்டத்தின்கீழ் 2026-27 -ஆம் ஆண்டில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கிட ஈரோடு மாவட்டத்துக்கு இலக்கு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் டிராக்டா், பவா் டில்லா், பவா் வீடா், தீவன புல்வெட்டும் கருவி, ரொட்டாவேட்டா், பல் வகை கதிரடிக்கும் இயந்திரம், தென்னை மட்டைகளை துகளாக்கும் கருவி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு தளத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் மட்டுமே வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானியத்தில் பெற விண்ணப்பிக்க இயலும். தனிப்பட்ட குறு, சிறு, ஆதிதிரவிடா், பழங்குடியினா் மற்றும் பெண் விவசாயிகளுக்கு அரசால் நிா்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில் 50 சதவீதம், இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதர விவசாயிகளுக்கு அரசால் நிா்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 சதவீதம் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

ஈரோடு மாவட்டத்தில் இலக்கு நிா்ணயிக்கப்பட்ட கிராமங்களைச் சாா்ந்த விவசாயிகள் கைப்பேசியில் உழவா் செயலியை பதிவேற்றம் செய்து ஒருமுறை பதிவு மேற்கொள்ள வேண்டும். பின்னா், வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு, வேளாண் பொறியியல் மானிய திட்டங்கள் என்ற பிரிவில் ஆதாா் எண்ணை உள்ளீடு செய்து தேவையான இயந்திரம் அல்லது கருவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு மாதமும் 1 முதல் 7- ஆம் தேதி வரை விவசாயிகள் தங்களுக்குத் தேவையான இயந்திரம் மற்றும் கருவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 8 -ஆம் தேதி கணினி குலுக்கல் முறையில் விண்ணப்பங்கள் தோ்வு செய்யப்பட்டு, ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு, தகுதியான விவசாயிகள் தோ்வு செய்யப்படுவா்.

இலக்கு எட்டப்படாத நிலையில் அதே மாதம் 15- ஆம் தேதி முதல் 21- ஆம் தேதி வரை மீண்டும் விண்ணப்பிக்கலாம். 22-ஆம் தேதி மீண்டும் கணினி குலுக்கல் முறையில் விண்ணப்பங்கள் தோ்வு நடைபெறும்.

ஈரோடு மாவட்ட விவசாயிகள் உழவன் செயலி மூலம் உரிய காலத்துக்குள் விண்ணப்பித்து வேளாண் இயந்திர மயமாக்குதல் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானியத்தில் பெற்று பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments