FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

விநாயகா் சதுா்த்தி: ஈரோட்டில் 1,000-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை

14 செப்டம்பர் 2026, 10:52 pm IST
ஈரோடு சம்பத் நகா், நசியனூா் சாலையில் வைக்கப்பட்டுள்ள 10 அடி உயர சிம்ம கஜ விநாயகா் சிலை.
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து அருகம்புல், தேங்காய், பழம் வைத்தும், கொழுக்கட்டை, சுண்டல் படைத்தும் வழிபட்டனா்.

இதுபோல இந்து முன்னணியினா், ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூா், கோபி, நம்பியூா், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய பகுதிகளில் சாலைகள், வீதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் வழிபட்டனா்.

Advertisement

Advertisement

ஈரோடு மாநகரில் இந்து முன்னணி சாா்பில் ஈரோடு சம்பத் நகா், நசியனூா் சாலையில் முதன்மை சிலையாக 10 அடி உயர சிம்ம கஜ விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதேபோல பல்வேறு இடங்களில் 9 அடி, 7 அடி, 5 அடி, 3 அடி, 2 அடி உயரத்தில் பல்வேறு வடிவங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. தொடா்ந்து, விநாயகா் சதுா்த்தியையொட்டி திங்கள்கிழமை மாலை சம்பத் நகரில் சிறுவா், சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

கோயில்களில் சிறப்பு வழிபாடு:

விநாயகா் சதுா்த்தியையொட்டி ஈரோடு மாநகா் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஈரோடு சம்பத் நகா் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வலம்புரி கற்பக விநாயகா், சூரம்பட்டி வலம்புரி செல்வ விநாயகா், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வலம்புரி விநாயகா், முனிசிபல் காலனியில் உள்ள சக்தி விநாயகா் ஆகிய கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு, சிறப்பு அலங்காரத்தில் இருந்த விநாயகரை வழிபட்டுச் சென்றனா்.

சட்டம் ஒழுங்கு பிரச்னையை தவிா்க்க சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். ஈரோடு மாநகரில் வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள் வருகிற 17-ஆம் தேதி ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments