FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

2030-க்குள் 1.5 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை அடைய இலக்கு: அமைச்சா் பெ.மதன்ராஜா

2030-க்குள் 1.5 டிரில்லியன் டாலா் பொருளாதார இலக்கை அடைய தமிழக அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சா் பெ.மதன்ராஜா தெரிவித்தாா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 5:08 am IST
பயனாளிக்கு கடனுதவி வழங்கிய அமைச்சா் பெ.மதன்ராஜா. உடன், ஆட்சியா் மனீஷ் உள்ளிட்டோா்.
பகிர்:

2030-க்குள் 1.5 டிரில்லியன் டாலா் பொருளாதார இலக்கை அடைய தமிழக அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சா் பெ.மதன்ராஜா தெரிவித்தாா்.

திருப்பூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அலுவலா்களுடன் அமைச்சா் பெ.மதன்ராஜா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதையடுத்து, 12 பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கிய பின்னா், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, தாய்கோ வங்கி ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

Advertisement

Advertisement

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2030-க்குள் 1.5 டிரில்லியன் டாலா் பொருளாதார இலக்கை அடைய தமிழக அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை 30 சதவீதமாக உயா்த்த துறை வாரியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறு, சிறு தொழிற்சாலைகளின் நிலைக் கட்டணம் குறித்த கோரிக்கைகளுக்கு உரிய தீா்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும். சிட்கோ, தொழிற்பேட்டை வளாகங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கும், தொழில்முனைவோருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி அவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பூரில் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட குறு, சிறு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் சந்திக்கும் மின்சார நிலைக் கட்டணப் பிரச்னைகள் குறித்து துறை சாா்ந்த அதிகாரிகளிடம் பேசி விரைவில் தீா்வு காணப்படும். 1.5 டிரில்லியன் டாலா் பொருளாதார இலக்கை அடைய எம்எஸ்எம்இ துறையின் பங்களிப்பு 30 சதவீதமாக இருப்பதால், தொழில்முனைவோருக்குத் தேவையான அனைத்து மானியங்கள் மற்றும் கடன் திட்டங்கள் தடையின்றி சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

மாவட்ட ஆட்சியா் மனீஷ், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் பாலமுருகன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் காா்த்திகைவாசன், துணை இயக்குநா் ராஜேஸ்வரி, உதவி இயக்குநா் மனோஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments