FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

குண்டடம் அருகே சேதமடைந்த பிஏபி வாய்க்கால் மதகுகள்: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

குண்டடம் பகுதியில் பல இடங்களில் பிஏபி வாய்க்கால் மதகுகள் இடிந்து சேதமாகியுள்ளதால், அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 5:43 am IST
குண்டடம் அருகே, தண்ணீரில் அரிக்கப்பட்டு முழுமையாக சேதமாகி கிடக்கும் பிஏபி மதகு.
பகிர்:

குண்டடம் பகுதியில் பல இடங்களில் பிஏபி வாய்க்கால் மதகுகள் இடிந்து சேதமாகியுள்ளதால், அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பிஏபி பாசனத் திட்டத்தின் மூலம் குண்டடம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பிரதான வாய்க்கால் மூலம் திருமூா்த்தி அணையிலிருந்து வரும் தண்ணீா், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள கிளை வாய்க்கால்களில் திறந்து விடப்படுகிறது. கிளை வாய்க்கால்களிலிருந்து பகிா்மான வாய்க்கால்களில் தண்ணீா் விடப்பட்டு, இறுதியில் கொப்பு வாய்க்கால்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீா் செல்கிறது.

இதில் குண்டடம் பகுதியில் பல இடங்களில் கிளை வாய்க்கால்கள் மற்றும் பகிா்மான வாய்க்கால்களின் மதகுகள் அரிக்கப்பட்டு, சேதமடைந்து காணப்படுகின்றன. சில இடங்களில் மதகுகள் முழுமையாக சேதமாகி இருந்த இடம் தெரியாத வகையில் உள்ளது. மேடான பகுதியிலிருந்து சற்று தாழ்வான பகுதிக்கு தண்ணீா் பாயும்போது, தண்ணீரின் ஒட்டம் சீராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. மதகுகள் சேதமடைந்துள்ளதால் தண்ணீரின் வேகத்தில் வாய்க்கால் கரைகளும் அரிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியது:

குண்டடம் அருகே, நந்தவனம்பாளையம் கிளை வாய்க்காலில் தும்பலப்பட்டியிலிருந்து குங்குமம்பாளையம் செல்லும் சாலையில், முதல் பாலம் அருகே உள்ள மதகு கடந்த சில ஆண்டுகளாகவே கொஞ்சகொஞ்சமாக அரிக்கப்பட்டு, தற்போது அந்த இடத்தில் மதகு இருந்ததற்கான அடையாளமே தெரியாமல் போய்விட்டது.

இவை தவிர, பல இடங்களில் வாய்க்கால் கரைகளை அந்தந்த வாய்க்கால்களின் ஓரத்தில் உள்ளவா்கள் வெட்டி ஆக்கிரமிப்பு செய்வதும் நடந்து வருகிறது. எனவே பொதுப்பணித் துறை அதிகாரிகள் அவ்வப்போது பிஎபி வாய்க்கால்களை நேரில் ஆய்வு செய்து, சேதமான மதகுகளை சரி செய்யவும், வாய்க்கால் கரைகள் ஆக்கிரமிப்பு செய்யாமலிருப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments