திமுகவில் மாற்றுக் கட்சியினருக்கு முக்கியத்துவம்: திருப்பூர் மாவட்ட செயலாளர் விலகல்!
திருப்பூரில் திமுக மத்திய மாவட்ட செயலாளர் செல்வராஜ் அக்கட்சியிலிருந்து விலகியது குறித்து...
திருப்பூர் திமுக மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான செல்வராஜ், கட்சியில் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது என்று கூறி அக்கட்சியிலிருந்து விலகுவதுடன், தீவிர அரசியலில் இருந்தும் ஒதுங்குவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வராஜ் தெரிவித்ததாவது:
திருப்பூரில் 1976 ஆம் ஆண்டு தொழிற்சங்கத்தில் சேர்ந்து பணியாற்றினேன். நகர கழக செயலாளராக பணியாற்றினேன். தொடர்ந்து, மேயர், மாவட்ட செயலாளர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றினேன். இருப்பினும், 2026 முதல் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. இது எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. பல கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்புகள் வந்தது. ஆனால் நான் செல்லவில்லை. தொழில் அதிபர் டாலர் பாலு அழுத்தத்தின் பேரில் மாற்றுக் கட்சியில் இருந்து வந்த தினேஷ் குமாருக்கு திருப்பூர் தெற்கு தொகுதியை ஒதுக்கினார்கள்.
Advertisement
Advertisement
நான் விருப்ப மனு அளிக்காத பல்லடம் தொகுதிக்கு என்னை போட்டியிட சொன்னார்கள். இருந்தாலும் கழகத்தின் சொல்லை ஏற்று தேர்தல் பணி செய்தேன். ஒரு தொழில் அதிபர், மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவருக்கு இருக்கும் அதிகாரம், கழகத்திற்காக உழைத்த எனக்கு இல்லை என்பதை நினைக்கும் போது, மிகவும் மன அழுத்தம் ஏற்படுகிறது. எனவேதான் கழகத்தின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதிவில் இருந்து விலகிக் கொள்கிறேன். வேறு எந்த கட்சிக்கும் செல்லும் எண்ணம் எனக்கு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என செல்வராஜ் பேசினார்.