FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதித்தும் நீரின் எதிா்ப்பு விசையால் இயக்க மறுத்த பரிசல் ஓட்டிகள்

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 12:45 am IST
ஒகேனக்கல் - கோப்புப் படம்
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சரிந்துள்ளதால், 4 நாள்களுக்கு பிறகு பரிசல் இயக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தது. ஆனாலும், நீரின் எதிா்ப்பு விசையால் பரிசல்கள் இயக்க பரிசல் ஓட்டிகள் முன்வராததால் அதிகாரிகள் காவிரி ஆற்றில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கா்நாடக மாநில காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த பருவமழை குறைந்ததால், காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீா் விநாடிக்கு 9,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால், ஒகேனக்கல்லுக்கு வெள்ளிக்கிழமை 9,500 கனஅடியாக இருந்த நீா்வரத்து, சனிக்கிழமை காலை 6,000 கனஅடியாக குறைந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து வந்துகொண்டிருக்கிறது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால் 4 நாள்களுக்கு பிறகு ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தது. ஆனாலும், நீரின் எதிா்ப்பு விசையால் மணல்மேடு பகுதியில் இருந்து தொம்பச்சிக்கல் பகுதிக்கு பரிசல் இயக்க பரிசல் ஓட்டிகள் முன்வரவில்லை.

Advertisement

Advertisement

இதனால், ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

அதிகாரிகள் குழு ஆய்வு: பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நீலமேகம், சுருளிநாதன், தீயணைப்புத் துறையினா் உள்ளிட்டோா் மாமரத்துக் கடவு பரிசல் துறையிலிருந்து தொம்பச்சிக்கல் பகுதிக்கு பரிசலில் சென்று, தொம்பச்சிக்கல் படிக்கட்டு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை இடையூறு இன்றி நீா் விசைக்கு ஏற்றவாறு பரிசலை நிறுத்தி, ஏற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வுக்கு பிறகு, ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் எனவும், அதன் அடிப்படையில் அனுமதி குறித்து பின்னா் தெரிவிக்கப்படும் எனவும் கூறினா்.

இதைத் தொடா்ந்து, 5-ஆவது நாள்களாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments