நெகிழிக் கழிவுகளால் ஒகேனக்கலுக்கு சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்; நிரந்தரத் தீா்வு எப்போது?
நெகிழிக் கழிவுகளால் ஒகேனக்கலுக்கு சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் ஏற்படுவது குறித்து...
ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் அதிகரித்து வரும் நெகிழிப் பயன்பாடு, காவிரி ஆறு மாசுபடுதல் மற்றும் வனவிலங்குகளின் உயிரிழப்புக்கு காரணமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இதற்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தென்னகத்தின் நயாகரா என்று அழைக்கப்படும் ஒகேனக்கல் அருவிப் பகுதி, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கிறது. இங்கு இயங்கி வரும் உணவகங்கள், மளிகைக் கடைகள், சோப்பு மற்றும் ஷாம்பு விற்பனை நிலையங்கள், மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களில் நெகிழிப் பொருள்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது.
சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் தண்ணீா் பாட்டில்கள், ஷாம்பு பாக்கெட்டுகள், எண்ணெய் பாட்டில்கள், நெகிழிப் பைகள் உள்ளிட்ட கழிவுகள் வனப்பகுதி மற்றும் காவிரி ஆற்றில் அதிக அளவில் வீசப்படுகின்றன. பென்னாகரம் முதல் மடம் சோதனைச் சாவடி வரை உள்ள வனப்பகுதியில் சாலையோரங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகள் பரவிக் கிடக்கின்றன.
Advertisement
Advertisement
இந்த நெகிழிக் கழிவுகளை மான், குரங்கு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உண்பதால் அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. சில இடங்களில் சேகரிக்கப்படும் நெகிழிக் கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் வனப்பகுதியிலேயே எரிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காவிரியில் நீா்வரத்து குறைந்துள்ளதால், ஆற்றில் தேங்கியுள்ள நீரில் நெகிழிக் கழிவுகள் மற்றும் மசாஜ் எண்ணெய் கழிவுகள் தேங்கி துா்நாற்றம் வீசுவதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனா். மசாஜ் மையங்களில் இருந்து வெளியேறும் எண்ணெய் கழிவுகளை சுத்திகரிக்கும் அமைப்புகளும் முறையாக பராமரிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
நெகிழிப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், ஒகேனக்கலில் நெகிழிப் பைகளுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும். மடம் சோதனைச் சாவடியில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை சோதனை செய்து நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்ய வேண்டும். மாற்று பொருள்களான துணிப் பைகள், காகிதப் பைகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
நெகிழி இல்லா ஒகேனக்கலை உருவாக்க மாவட்ட நிா்வாகம், வனத் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஊரக உள்ளாட்சித் துறை இணைந்து விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு வலுத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.