முகப்பு
நாமக்கல்

கொல்லிமலை மலைப்பாதையில் விவசாயி அடித்துக் கொலை: மகன் உள்பட மூன்று பேருக்கு வலைவீச்சு

கொல்லிமலை மலைப்பாதையில் வாகனத்தில் சென்ற விவசாயியை அடித்துக் கொலை செய்த மகன் உள்பட 3 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:08 AM
செல்வராஜ்
பகிர்:

நாமக்கல்: கொல்லிமலை மலைப்பாதையில் வாகனத்தில் சென்ற விவசாயியை அடித்துக் கொலை செய்த மகன் உள்பட 3 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு செங்காட்டுபட்டியை சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ் (45). இவர் செவ்வாய்க்கிழமை காலை தனது இரண்டாவது மனைவி மற்றும் குடும்பத்தினருடன்  நான்கு சக்கர வாகனத்தில்(ஜீப்) சேந்தமங்கலத்தில் இருந்து கொல்லிமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். 

காரவள்ளி வனத்துறை சோதனை சாவடியை கடந்து முதலாம் கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது, அங்கு மறைந்திருந்த அவரது முதல் மனைவியின் மகன் ராஜ்குமார்(25) மற்றும் அவரது நண்பர்கள் இருவர்  வாகனத்தின் கண்ணாடியை உடைத்து  செல்வராஜை கல்லால் அடித்து கொலை செய்தனர். 

பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து வந்த வாழவந்திநாடு காவல் துறையினர் செல்வராஜை மீட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் நிலத்தகராறு  விவகாரத்தில் தந்தையான செல்வராஜை அவரது மகன் ராஜ்குமார் மற்றும் நண்பர்கள் கொலை செய்தது தெரியவந்துள்ளது.  தப்பியோடிய மூன்று பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.