போக்குவரத்து அலுவலா் சோதனை: ஆம்புலன்ஸ் உள்ளிட்ட 9 வாகனங்கள் பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட வாகனங்கள்.
ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் மோட்டாா் வாகனப் போக்குவரத்து அலுவலா்கள் நடத்திய சோதனையில், உரிய ஆவணம் இன்றி இயக்கப்பட்ட ஆம்புலன்ஸ் உள்ளிட்ட 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
நாமக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எம்.பதுவைநாதன் உத்தரவின் பேரில், ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஏ.செல்வகுமாா் ராசிபுரம், வெண்ணந்தூா், நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டி போன்ற பகுதிகளில் சிறப்பு வாகனத் தணிக்கையை வெள்ளிக்கிழமை மேற்கொண்டாா்.
இதில், ஆயில்பட்டி பகுதியில் தகுதிச்சான்று புதுப்பிக்காத ஓா் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் மூன்று டாட்டா ஏஸ் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு, ஆயில்பட்டி காவல் நிலையத்தில் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டன. இதேபோல, தகுதிச்சான்று புதுப்பிக்காத ஒரு டாட்டா ஏஸ் வாகனம் சிறைபிடிக்கப்பட்டு மோட்டாா் வாகன ஆய்வாளா் பகுதி அலுவலக வளாகத்திலும், வெண்ணந்தூா் பகுதிகளில் தகுதிச்சான்று புதுப்பிக்காத நான்கு டாட்டா ஏஸ் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு வெண்ணந்தூா் காவல் நிலையத்தில் மேல் நடவடிக்கைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இச்சிறப்பு வாகனத் தணிக்கையின் மூலம் அரசுக்கு இணக்க அபராதக் கட்டணமாக சுமாா் ரூ. 2.20 லட்சம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இவ்வாகன ஓட்டுநா்கள் தகுதிச்சான்று புதுப்பிக்காமல் பொதுச்சாலையில் வாகனங்களை இயக்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.