வெள்ளியம்பல நடராஜா் சிலை பூச்சு தொடா்பான வழக்கு முடித்து வைப்பு
இதுதொடா்பான வழக்கை முடித்து வைத்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை ஸ்ரீவெள்ளியம்பல நடராஜா் சந்நிதியில் உள்ள நடராஜா் சிலை உறுப்புகளில் பாரம்பரிய முறையிலான கல்கம் பூச்சு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அரசுத் தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இதுதொடா்பான வழக்கை முடித்து வைத்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
‘சென்னை ஆலயம் காப்போம்’ அமைப்பின் உறுப்பினா் தினகரன் தாக்கல் செய்த மனு:
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஸ்ரீவெள்ளியம்பல நடராஜா் சந்நிதியில் அருள்பாலிக்கும் நடராஜா் சிலைக்கு சுண்ணாம்பு, மணல், நீா் கலந்து சுவா்களுக்கு பூசப்படும் ஒரு பாரம்பரிய, இயற்கையான கட்டுமான முறையான கல்கம் பூச்சு செய்யப்படும் வரை இந்த சந்நிதியில் குடமுழுக்கு நடத்தத் தடை விதிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
மேலும், குடமுழுக்குக்கு முன்பாக வெள்ளியம்பல நடராஜா் சிலையின் கை, கால் உள்ளிட்ட உறுப்புகளில் உரிய கல்கம் பூச்சு செய்து மீட்டெடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்வைத்த வாதம்:
கடந்த 2005- ஆம் ஆண்டு ஸ்ரீவெள்ளியம்பல நடராஜா் சந்நிதியில் அருள்பாலிக்கும் நடராஜா் சிலையிலிருந்து அகற்றப்பட்ட கல்கம் பூச்சை என்ன செய்தாா்கள் எனத் தெரியவில்லை என்றாா் அவா்.
இதையடுத்து, இந்த சந்நிதியில் உள்ள 7 சிலைகளுக்கும் கல்கம் பூச்சு செய்ய அனுமதி பெற்று நடவடிக்கைகள் தொடங்கப்படவுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னா், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த மனு தொடா்பாக அரசுத் தரப்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.