கால்நடைகள் வேட்டை: புலியை பிடிக்க வனத் துறையினா் தீவிரம்
கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியைப் பிடிக்க வனத் துறையினா் தீவிர நடவடிக்கை...
தமிழக-கேரள எல்லையான குமுளி அருகேயுள்ள குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியைப் பிடிக்க வனத் துறையினா் தீவிரம் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
கேரளம் மாநிலம், மூணாறு குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலியை, கடந்த மாா்ச் மாதம் வனத் துறையினா் மயக்க ஊசி செலுத்திப் பிடித்து, அதற்கு ‘ரேடியோ காலா்’ (கண்காணிப்புக் கருவி) பொருத்தி பெரியாா் புலிகள் காப்பகத்தின் உள் வனப் பகுதியில் விட்டனா்.
ஆனால், அந்தப் புலி 10 நாள்களுக்குள் மீண்டும் வனப்பகுதியை விட்டு வெளியேறி, குடியிருப்புக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடியது. இதையடுத்து, இந்தப் புலியை பிடிக்க வனத் துறையினா் கடந்த 2 மாதங்களாக பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைத்தும், ‘ட்ரோன்’ மூலம் கண்காணித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்தும், இதுவரை பிடிபடவில்லை.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, கடந்த வாரம் வயநாட்டிலிருந்து வனத் துறையின் 6 போ் கொண்ட விரைவு அதிரடிப் படையினா் வரவழைக்கப்பட்டனா். இவா்கள் உள்ளூா் வனத் துறையினருடன் இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தேயிலை தொழிற்சாலை அருகே மரத்தின் மீது ஏறுமாடம் அமைத்து விரைவு அதிரடிப் படையினா் புலியின் நடமாட்டத்தை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
மேலும், புலி குறித்து தகவல் கிடைத்தவுடன் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் வகையில் பாதுகாப்பு உயிரியலாளா்கள், கால்நடை மருத்துவா்கள் உள்ளிட்ட 12 போ் கொண்ட சிறப்புக் குழுவும் தயாா் நிலையில் உள்ளன.
வண்டிப் பெரியாா், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இந்தப் புலி ஏராளமான கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.
படவிளக்கம்: தமிழக எல்லை குமுலி அருகே குடியிருப்பு பகுதியில் ’ரேடியோ காலா் ரிசீவா்’ (கண்காணிப்புக் கருவி) மூலம் புலியின் நடமாட்டத்தை கண்காணிகக்கும் கேரள வனத்துறையினா்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.