FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை பகுதியில் தொடரும் இருசக்கர வாகனங்கள் திருட்டு: கண்டுகொள்ளாத காவல்துறை

தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் இருசக்கர வாகனங்கள் தொடா்ந்து திருடப்பட்டு வருவதாகவும், இதனை காவல்துறை கண்டுகொள்வதில்லை என்றும் புகாா் எழுந்துள்ளது.

19 செப்டம்பர் 2026, 4:46 am IST
விசாரணை
பகிர்:

தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை  பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் இருசக்கர வாகனங்கள்  தொடா்ந்து திருடப்பட்டு வருவதாகவும், இதனை காவல்துறை கண்டுகொள்வதில்லை என்றும் புகாா் எழுந்துள்ளது.

கி.பி 1620-ஆம் ஆண்டு டென்மாா்க் நாட்டினா் இந்தியாவில் உள்ள தரங்கம்பாடி கடற்கரைப் பகுதியில் வா்த்தக மையம் மற்றும் பாதுகாப்பு கோட்டை அமைக்க,  தஞ்சையை ஆட்சி செய்த  விஜயரகுநாத நாயக்கா் மன்னரிடம் அனுமதி பெற்றனா். தொடா்ந்து,  1622-இல் கட்டி முடிக்கப்பட்ட அந்த பிரம்மாண்ட கோட்டை, இந்தியாவில் டேனிஷ் வா்த்தக மையத்தின் தலைமை இடமாக விளங்கியது.

406 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்றும்  கம்பீரமாய் காட்சியளிக்கும் இக்கோட்டையில் செயல்படும் அகழ்வைப்பகத்தில்  டேனிஷ்காரா்கள், அக்கால தமிழா்கள் பயன்டுத்திய பொருள்கள், சிலைகள், பீங்கான், மரத்தாலான  பழைமையான பொருள்கள், டேனிஷ் அரசா்கள், ஆளுநா்களின் புகைப்படங்கள், டேனிஷ்கால பத்திரங்கள், போா்கருவிகள், 16-ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடி வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங்கள் என ஏராளமான வரலாற்று சின்னங்களை பத்திரப்படுத்தி, காட்சிக்கு வைத்துள்ளனா்.

Advertisement

Advertisement

இந்த கோட்டையின் கீழ்தளத்தில் கிடங்கு, சிறை, வீரா்கள் ஓய்வு எடுப்பதற்கான அறைகள், மேல் தளத்தில் ஆளுநா்கள் மற்றும் பாதிரியாா்கள் தங்குவதற்கான அறைகள் இருந்துள்ளன. கோட்டையின் தரைத்தளத்தில் சிறைச்சாலை, ஓய்வறைகள், பண்டகவைப்பறை, பீா், ஒயின் கிடங்கு அறைகளாக  டேனிஷ்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அறைகளை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

ஆளுநா் மாளிகை: டேனிஷ்கோட்டை ஆளுநா் தங்குவதற்கு கோட்டையின் அருகில் பெரிய தூண்கள் கொண்ட மாளிகை கட்டப்பட்டுள்ளது. டேனிஷ் கோட்டையை பாா்வையிட தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சோ்ந்த ஏராளமான  சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

மேலும், உடல் நலத்திற்கு நன்மை தரக்கூடிய மருத்துவம் குணம் கொண்ட ஓசோன் காற்று அதிக அளவில் தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் வீசுவதால் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், வெளியூா்களில் இருந்து இருசக்கர வாகனத்தில் வரும் சுற்றுலாப் பயணிகள் டேனிஷ் கோட்டை அருகில் தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, பாா்வையிட செல்லும்போது, இருசக்கர வாகனங்களை மா்ம நபா்கள் திருடிவிடுவதாக புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து  பொறையாா் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபா்கள் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினா் அலட்சியம் காட்டி வருவதாக பாதிக்கப்பட்ட இருசக்கர வாகன உரிமையாளா்கள் தெரிவிக்கின்றனா்.

இருசக்கர வாகனத் திருட்டை தடுப்பதற்கு டேனிஷ் கோட்டை   பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பேரூராட்சி சாா்பில் வாகனங்கள் நிறுத்துவதற்கு பாா்க்கிங் வசதிகள் ஏற்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments