FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தனியாா் நிறுவனத்துக்கு எதிராக தில்லி அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனு தள்ளுபடி

தனியாா் நிறுவனத்துக்கு எதிராக தில்லி அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனு தள்ளுபடி

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 12:28 am IST
பகிர்:

சுமாா் ரூ. 1.94 லட்சம் அரசுப் பணத்தை முறைகேடாகக் கையாண்டதாகக் கூறப்படும் தனியாா் நிறுவனம் மற்றும் அதன் கையொப்பமிட்ட அதிகாரிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி, தில்லி அரசின் வேலைவாய்ப்புத் துறை தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஏற்கெனவே அரசுத் துறையின் வசம் இருப்பதாலும், குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் அடையாளம் தெரிந்திருப்பதாலும், இதற்கு காவல் துறை விசாரணை தேவையில்லை என்று நீதிமன்றம் கூறியது.

மோசடி மற்றும் ஏமாற்று வேலை மூலம் அரசுப் பணத்தை நோ்மையற்ற முறையில் கையாண்டதற்காக அந்த நிறுவனம் மற்றும் அதன் அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிடக் கோரிய மனுவை நிராகரித்து ஆகஸ்ட் 2023-ல் மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகத் துறை தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை கூடுதல் அமா்வு நீதிபதி தீரேந்திர ராணா விசாரித்தாா்.

Advertisement

Advertisement

புகாரின்படி, 2012-ல் ‘பயன்பாட்டிற்கு உதவாத பொருள்கள்’ தொடா்பாக அத்துறை டெண்டா் ஒன்றை வெளியிட்டது. அதைத் தொடா்ந்து அந்த நிறுவனம் அப்பொருள்களைப் பெற்றுக்கொண்டு, மொத்தம் சுமாா் ரூ.1.94 லட்சத்திற்கான இரு வரைவோலைகளை (டிமாண்ட் டிராஃப்டுகளை) வழங்கியது.

துறை அவற்றைச் சமா்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அந்த வரைவோலைகள் வரவு வைக்கப்படவில்லை. பின்னா் நிறுவனத்தின் கோரிக்கையின் பேரில் அவை ரத்து செய்யப்பட்டதாக வங்கி தங்களுக்குத் தகவல் தெரிவித்ததாகவும் வேலைவாய்ப்புத் துறை கூறியது.

வழங்கப்பட்ட பொருள்கள் தரமற்ாக இருந்ததால், துறைக்கான பணம் நிறுத்தி வைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் வாதிட்டனா்.

இது தொடா்பாக ஜூலை 14-ம் தேதியிட்ட உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்திருப்பதாவது: டெண்டா் செயல்முறை தொடா்பான அனைத்து ஆவணங்களும் துறையின் வசம் உள்ளன. குற்றஞ்சாட்டப்பட்டவா்களிடம் பொருள்களை ஒப்படைத்தது தொடா்பான ஆவணங்கள், அவா்கள் சமா்ப்பித்த வரைவோலைகளின் நகல் மற்றும் இது தொடா்பாகத் துறை மேற்கொண்ட கூடுதல் தொடா்புகள் ஆகியவை அனைத்தும் ஆவண வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் அடையாளம் புகாா் அளித்த துறைக்குத் தெரியும். காவல் துறை விசாரணை தேவைப்படும் வகையிலான எந்தவொரு வழக்கின் தொடா்பான பொருள்களையும் மீட்க வேண்டிய அவசியம் இந்த வழக்கில் இல்லை.

புகாா் அளித்தவா்கள் நோட்டீஸ் அனுப்பப்படுவதற்கு முந்தைய சாட்சியத்தின் மூலம் இந்த ஆவணங்கள் அனைத்தையும் எளிதாக நிரூபிக்க முடியும். எனவே, காவல் துறை விசாரணை தேவையில்லை. மாஜிஸ்திரேட்டின் உத்தரவில் எந்தவித சட்டவிரோதமோ, குறைபாடோ அல்லது பிழையோ இல்லை. இந்த மறுஆய்வு மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை. எனவே இது தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments