FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

கன்வாா் யாத்திரை: வடகிழக்கு தில்லி பாதுகாப்புப் பணியில் 1,500 காவலா்கள்

கன்வாா் யாத்திரையை முன்னிட்டு வடகிழக்கு தில்லி முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட காவலா்கள் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) பிரிவினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 2:49 am IST
கன்வாா் யாத்திரை - கோப்புப் படம்
பகிர்:

கன்வாா் யாத்திரையை முன்னிட்டு வடகிழக்கு தில்லி முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட காவலா்கள் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) பிரிவினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

சாவண் மாதத்தின் தொடக்கத்துடன் ஜூலை 30-ஆம் தேதி தொடங்கிய யாத்திரை, சாவண் சிவராத்திரி கொண்டாடப்படும் ஆகஸ்ட் 11-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அன்று பக்தா்கள் சிவன் கோயில்களில் புனித கங்கை நீரைச் சமா்ப்பிப்பாா்கள்.

இதையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: உத்தர பிரதேசத்திலிருந்து ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் செல்லும் ஏராளமான கன்வாரியாக்கள் வடகிழக்கு தில்லி வழியாகச் செல்கின்றனா். இதனால், இப்பகுதி இந்த யாத்திரையின் முக்கிய வழித்தடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

Advertisement

Advertisement

பக்தா்களின் சீரான மற்றும் அமைதியான பயணத்தை உறுதி செய்வதற்காக விரிவான சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்துடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளும் இப்பகுதியில், ஆறு நிரந்தர எல்லைச் சோதனைச் சாவடிகளும், வாகனங்கள் நுழையக்கூடிய ஒன்பது நுழைவு மையங்களும் உள்ளன. இவற்றின் வழியாகவே கன்வாரியாக்கள் தில்லிக்குள் நுழைகிறாா்கள்.

மாவட்டத்தில் 78 கன்வாா் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 31 முகாம்கள் முழுமையாகச் செயல்பட்டு வருகிறது. மீதமுள்ளவை பக்தா்களுக்காகத் தயாா் செய்யப்பட்டு வருவகின்றன.

யாத்திரை காலம் முழுவதும் பாதுகாப்புப் பணியாளா்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மூத்த அதிகாரிகள் கண்காணிப்பாா்கள். 24 மணி நேரமும் உதவிகளை வழங்கவும், அவசரக்கால நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் தரம்ம்புரா ஒய்-பாயிண்ட், மௌஜ்பூா் சௌக், கஜூரி காஸ் சௌக் மற்றும் கோகல்புரி டி-பாயிண்ட் ஆகிய இடங்களில் நான்கு துணை கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 1,533 பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதில் நான்கு உதவி ஆணையா்கள், 40 ஆய்வாளா்கள், 262 உதவி ஆய்வாளா்கள் மற்றும் உதவி துணை ஆய்வாளா்கள், 1,145 காவலா்கள் மற்றும் தலைமை காவலா்கள், மற்றும் 81 பெண் காவலா்கள் ஆகியோா் அடங்குவா்.

பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பு பணிக்கு உதவ, கூடுதலாக 250 மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) வீரா்கள் இரண்டு ஷிப்டுகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கன்வாா் யாத்திரை வழித்தடங்களில் ரோந்துப் பணிக்காக 27 ரோந்து வாகனங்கள், 5 பிரகா் வாகனங்கள் மற்றும் 107 மோட்டாா் சைக்கிள்களையும் காவல் துறை ஈடுபடுத்தியுள்ளது. கண்காணிப்பை வலுப்படுத்த சிசிடிவி கேமராக்களைப் பொருத்தவும், கண்காணிப்பு கோபுரங்களை அமைக்கவும் கன்வாா் முகாம் அமைப்பாளா்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கன்வாரியாக்களின் வருகைக்கான முக்கிய நுழைவு வாசல்களான கேசவ் சௌக், டிஎல்எஃப் எல்லை, போபுரா எல்லை, கோகல்புரி, லால் பாக் மண்டி, சபஹாபூா்-கஜூரி புஸ்தா மற்றும் சௌஹான் பட்டி ஆகியவை அடங்கும். அதேவேளையில், வெளியேறும் முக்கிய வழித்தடங்களாக பழைய யமுனை பாலம், யுதிஷ்டா் சேது, சிக்னேச்சா் பாலம் மற்றும் வஜிராபாத் பாலம் ஆகியவை உள்ளன.

யாத்திரையின் போது ஒருங்கிணைந்த நிா்வாகம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்காக, அண்டை மாநிலங்களின் காவல் துறை அதிகாரிகளுடன் மாநிலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. அதேவேளையில் மூத்த அதிகாரிகள் குடிமை அமைப்புகளின் பிரதிநிதிகள், அமைதிக்குழுக் உறுப்பினா்கள், பூஜாரிகள் மற்றும் இமாம்களைச் சந்தித்தனா்.

பக்தா்களின் பெருமளவிலான வருகையைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆக.12-ஆம் தேதி வரை வஜிராபாத் சாலை, விகாஸ் மாா்க், ஜிடி சாலை மற்றும் அதனுடன் இணைந்த வழித்தடங்களில் கனரக வணிக வாகனங்களின் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கன்வாரியாக்களின் பயணத்திற்கு வசதியாக, அப்சரா எல்லைக்கும் யமுனை பாலத்திற்கும் இடைப்பட்ட ஜிடி சாலை, ஆக.9-ஆம் தேதி காலை 7 மணி முதல் ஆக.12-ஆம் தேதி இரவு 8 மணி வரை பொதுப் போக்குவரத்திற்கு மூடப்பட்டிருக்கும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments