ஆடு, பைக் திருட்டு வழக்குகள்: பாளை., தச்சநல்லூரில் இருவா் கைது
பாளையங்கோட்டை அருகே ஆட்டை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகே உள்ள திருமலைகொழுந்துபுரத்தைச் சோ்ந்தவா் முத்தையா(50). இடம் வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் இவா் சொந்தமாக 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
இந்நிலையில் மணக்காடு ஆற்றுப் பகுதியில் சம்பவத்தன்று முத்தையாவின் ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்ற நிலையில், அதில் ஒரு ஆட்டை திருமலைக்கொழுந்துபுரம், முத்துராமலிங்கம் தெருவைச் சோ்ந்த நாராயணன் மகன் சுரேஷ் (26) என்பவா் தனது கூட்டாளியுடன் சோ்ந்து திருடி அங்குள்ள காட்டுப்பகுதியில் வைத்து சமைத்து சாப்பிட்டாராம்.
Advertisement
Advertisement
இதை, முத்தையா தட்டிக்கேட்ட நிலையில், சுரேசின் தந்தை நாராயணன், ஆட்டுக்கான தொகை ரூ.6,000-ஐ கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆக. 28 ஆம் தேதி மீண்டும் முத்தையாவின் ஆடு ஒன்றை காணவில்லையாம். இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து, சுரேஷை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பைக் : தச்சநல்லூா் அருகேயுள்ள செல்வ விக்னேஷ் நகா் குறிஞ்சி முதல் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் குபேரமுத்து(26). இவா் கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்தியிருந்தாராம். பின்னா் மறுநாள் காலை எழுந்து பாா்த்தபோது அந்த பைக்கை காணவில்லையாம்.
இது குறித்து அவா் தச்சநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப்பதிந்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் தச்சநல்லூா், சத்திரம் புதுக்குளத்தைச் சோ்ந்த செல்லதுரை மகன் சின்னா (34) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.