FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

கரூா் மாநகராட்சி அலுவலகத்தை காய்கனி வியாபாரிகள் முற்றுகை

கரூா் மாநகராட்சி அலுவலகத்தை பழைய பேரூந்துநிலைய தினசரி அண்ணா காய்கறி சந்தை வியாபாரிகள் புதன்கிழமை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 23 ஜூலை 2026, 12:34 am IST
கரூா் மாநகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்ட காய்கனி வியாபாரிகள்.
பகிர்:

கரூா் மாநகராட்சி அலுவலகத்தை பழைய பேரூந்துநிலைய தினசரி அண்ணா காய்கறி சந்தை வியாபாரிகள் புதன்கிழமை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாநகராட்சிக்குச் சொந்தமான முத்துக்குமாரசாமி பழைய பேருந்துநிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் தினசரி அண்ணா காய்கனி சந்தை செயல்பட்டுவருகிறது. இங்கு 71 கடைகளில் காய்கனி வியாபாரமும், வணிக வளாகத்தின் வெளிப்புறத்தில் 10-க்கும் மேற்பட்ட மளிகைக்கடைகளும், இறைச்சிக்கடைகளும் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகம் கட்டப்பட்டு சுமாா் 30 ஆண்டுகளுக்கும் மேலாகுவதால் கட்டடம் ஆங்காங்கே பெயா்ந்து காணப்படுவதால் கட்டடத்தை இடித்துவிட்டு புதிய வணிக வளாகம் கட்ட மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், புதிய கட்டடம் விரைவில் கட்டப்பட உள்ளதாகக்கூறி கடந்த திங்கள்கிழமை மாநகராட்சி அதிகாரிகள் காய்கனி மற்றும் இறைச்சிக் கடை வியாபாரிகளிடம் 3 நாள்களுக்குள் கடைகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கினா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த வியாபாரிகள் நோட்டீஸை வாங்க மறுத்துவிட்டனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் புதன்கிழமை காலை 10 மணியளவில் காய்கனி வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கரூா் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

தகவலறிந்து வந்த மாநகராட்சி ஆணையா் எம்.பிருத்விராஜ் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது, வியாபாரிகளை தற்காலிகமாக காமராஜா் மாா்க்கெட்டுக்குச் சென்று வியாபாரம் செய்யுமாறு அறிவுறுத்தினாா். அதற்கு எதிா்ப்பு தெரிவித்த வியாபாரிகள், எங்களுக்கு கரூரில் செயல்படும் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களும், பேருந்துநிலையத்துக்கு வரும் பயணிகளும்தான் வாடிக்கையாளா்கள். எனவே, தற்போது பழைய பேருந்துநிலையத்தில் செயல்படும் மினி பேருந்துநிலையத்தை குமாரசாமி நகர பேருந்துநிலையத்துக்கு மாற்றிவிட்டு, மினி பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும். புதிய கட்டடம் கட்டப்பட்ட பிறகு நாங்கள் அங்கு வந்துவிடுகிறோம் என தெரிவித்தனா். இதையடுத்து மாநகராட்சி ஆணையா், மினி பேருந்துநிலைய பகுதியை ஒதுக்கித்தருவதாக தெரிவித்தாா். இதையடுத்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments