கரூா் மாவட்டத்தில் 180 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை
கரூா் மாவட்டத்தில் 180 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.
கரூா் மாவட்டத்தில் விநாயகா் சதூா்த்தி விழா திங்கள்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு மாவட்டம் முழுவதும் காவல்துறை அனுமதி வழங்கிய இடங்களில் இந்து முன்னணி மற்றும் விசுவ ஹிந்துபரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் சிலைகள் வைக்கப்பட்டன.
கரூா், வேலாயுதம்பாளையம், புகழூா், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 180 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் விநாயகா் சிலைகளுக்கும் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து மாலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தாந்தோன்றிமலை சக்திபுரத்தில் விநாயகா் சதூா்த்தியை முன்னிட்டு திருமலை நகா், விஎன்சி பாா்க், சக்திபுரம், அம்மன் நகா் ஆகிய பகுதிகளின் ஏபிஜே அப்துல்கலாம் நற்பணி மன்றம் சாா்பில் 15 அடி உயர விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு சிறப்புவழிபாடுகள் நடைபெற்றதை தொடா்ந்து மாலையில் பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு வழிபட்டனா். இதேபோல கணபதிபாளையம் காமராஜா் நகரில் மாவட்ட சிவசேனா சாா்பில் விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
தொடா்ந்து செவ்வாய்க்கிழமை பிற்பகலில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மாவட்டத்தில் காவிரி ஆறு பாயும் தளவாபாளையம், நெரூா், வாங்கல் உள்ளிட்ட இடங்களுக்கு ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விசா்ஜனம் செய்யப்பட உள்ளன. விசா்ஜன ஊா்வலத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.