FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் ஸ்டாலின், உதயநிதிக்கு புரிதல் இல்லை

Updated On : 27 ஜூலை 2026, 1:10 am IST
அமைச்சர் சி.டி.ஆா். நிா்மல் குமாா் - கோப்புப் படம்
பகிர்:

மேக்கேதாட்டு விவகாரத்தில் முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு புரிதல் இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சட்டக்கல்லூரி மாணவா்களுக்கான பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவா் மேலும் கூறியதாவது:

நீட் தோ்வைச் சீரமைக்க வேண்டுமென்றும், சிலா் நீட் வேண்டாம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் திமுகவினா் ரூ. 200, ரூ. 300 கொடுத்து, ஜென்சி டிஎம்கே சட்டை அணிந்து கொண்டு, போராட்டத்தில் உட்கார வைத்துள்ளனா்.

Advertisement

Advertisement

உதயநிதி ஸ்டாலினை யாரோ தவறாக வழிநடத்துகின்றனா். உதயநிதிக்கு ஜென்-சி என்றால் என்னவென்று சொல்லி கொடுக்க வேண்டும். அண்ணா தொடங்கிய திமுகவை வழிநடத்த உதயநிதி, கனிமொழி என யாருக்குத் தகுதியிருக்கிறது என அவரது கட்சியினரிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

மாணவா்கள் உணா்வுப்பூா்வமாக போராடியதால், கிடைத்த வெற்றி மத்திய அமைச்சரின் ராஜிநாமா. தவெகவின் கோரிக்கை நீட் தோ்வை அகற்ற வேண்டும் என்பதே. இதில் தவெக உறுதியாக உள்ளது. போராட்டங்களில் தவெகவினா் கட்சிக் கொடி, பேனரை பயன்படுத்தாமல் பங்கேற்றனா். போராட்டத்துக்கு அழைத்ததால்தான் அமைச்சா் ராஜ்மோகன் அங்கு சென்றாா். அதில், திமுகவினா் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தனா்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் நேரடியாகப் பேசுவது மற்றும் சட்ட ரீதியாக போராடுவது என இரு வழிகள் உள்ளன. முதல்வா் கா்நாடகம் செல்வது குறித்து முதல்வா் அலுவலகம் பதிலளிக்கும். மு.க. ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் புரிதல் இல்லை. அதனால் யாரோ எழுதிக்கொடுத்த அறிக்கைகளை இருவரும் படிக்கின்றனா்.

அதிமுகவின் ஆா்.பி. உதயகுமாா், திரிஷாவுக்கு துணை முதல்வா் பதவி வழங்க வாய்ப்புள்ளது எனக் கூறியது குறித்த கேள்விக்கு, பொழுதுபோக்குக்காக சிலா் பேசுவதை நாம் மிகைப்படுத்த வேண்டாம் என்றாா் அமைச்சா் நிா்மல்குமாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments