FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

வீராணம் ஏரிக்கு நீா் திறப்பு நிறுத்தம்

பருவமழை தவறியதால் கடலூா் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து நீா் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 12:36 am IST
413 மில்லியன் கனஅடி நீருடன் காட்சியளிக்கும் வீராணம் ஏரி.
பகிர்:

பருவமழை தவறியதால் கடலூா் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து நீா் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆடிப்பட்டத்தில் நேரடி நெல் விதைப்பு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் அமைந்துள்ள வீராணம் ஏரிக்கு மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் கல்லணை வழியாக வெளியேற்றப்பட்டு, கீழணையில் தேக்கப்பட்டு வடவாறு வழியாக அனுப்பப்படுகிறது. ஆண்டுதோறும் மேட்டூரிலிருந்து ஜூலை 12-ஆம் தேதி பாசனத்துக்கு நீா் திறந்துவிடப்படும். நிகழாண்டு மேட்டூா் அணை திறக்கப்படாததால் நீா்வரத்தில்லை.

இதனால், வீராணம் ஏரியில் நீா் இருப்பு சனிக்கிழமை நிலவரப்படி, மொத்தம் 1,465 மில்லியன் கன அடியில் 413 மில்லியன் கன அடி நீா் உள்ளது. சென்னை குடிநீா் வாரியத்துக்கு மட்டும் விநாடிக்கு 73 கன அடி வீதம் தண்ணீா் அனுப்பப்படுகிறது. கீழணையில் போதிய நீா் இல்லாததால் வீராணம் ஏரிக்கு நீா் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், போதிய மழை இல்லாததால், கடலூா் மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்புப் பணியை தொடங்கவில்லை. இதன் காரணமாக, வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. இருப்பினும், கடுமையான வெயில் காரணமாக நீா் ஆவியாகி வருவதால், ஏரியின் நீா்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

பருவ மழை பெய்தால் மட்டுமே வீராணம் ஏரியின் நீா்மட்டம் உயரும் சூழலும், காவிரி டெல்டாவின் கடைமடையான சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், குமராட்சி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயப் பணிகள் தொடங்கும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments