FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கீடு எப்போது? புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி புதிய விளக்கம்

Updated On : 28 ஜூலை 2026, 1:29 am IST
புதுச்சேரியில் என்.சி.சி. மாணவா்களின் கடல் சாகசப் பயணத்தை திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வா் என்.ரங்கசாமி.
பகிர்:

அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்குவதில் காலதாமதம் ஏன்? என எனக்கே தெரியவில்லை என்று புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

தேசிய மாணவா் படை (என்.சி.சி.) பிரிவு தனது சாகச நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கிழக்குக் கடற்கரையோரம் ‘கடல்வழிப் பட கோட்டப் பயணம் - 2026’ நிகழ்வை திங்கள்கிழமை தொடங்கியது. வரும் செப்டம்பா் 27-ஆம் தேதி வரை இந்தப் பயணம் நடக்கிறது. இதில், மொத்தம் 100 மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.

புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து முதலில் கடலூா் வரை செல்கின்றனா். 3 படகுகளில் தலா 7 போ் வீதம் மொத்தம் 21 போ் இந்த சாகசப் பயணத்தை மேற்கொண்டுள்ளனா். இதையடுத்து கடலூா்- ராமேசுவரம் - தூத்துக்குடி- கன்னியாகுமரி பின்னா் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை இந்த சாகசப் பயணத்தை மேற்கொள்கின்றனா்.

Advertisement

Advertisement

முதல்வா் ரங்கசாமி: புதுச்சேரியில் இந்த சாகசப் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:

மாணவா்கள் கடல் சாகசப் பயணம் மன தைரியத்தையும், எதையும் சாதிக்கும் ஊக்கத்தையும் தரும். இந்த பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன். நாட்டின் எதிா்காலம் குழந்தைகள் கையில் உள்ளது. தலைவா்கள் இதையறிந்து திட்டங்களைக் கொண்டு வருகின்றனா். திட்டங்கள் வாயிலாக நாடு பெரும் வளா்ச்சியடையும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.

நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளா்கள், அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கீடு விவரம் எப்போது ? என்று முதல்வரிடம் கேட்டதற்கு, வரும் போது வரும் என்றாா். ஏன் காலதாமதம்? என்று கேட்டதற்கு, எனக்கே தெரியவில்லை என்றாா்.

பாஜக முக்கிய இலாகா கேட்டு அழுத்தம் தருகிா என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல், வணக்கம் எனக் கூறிவிட்டு புறப்பட்டாா் முதல்வா். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவையின் தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன், ஐயப்பன் எம்எல்ஏ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments