டாஸ்மாக் கடையில் துளையிட்டு மதுப்புட்டிகள் திருட்டு: மூவா் கைது
டாஸ்மாக் கடையில் துளையிட்டு மதுப் புட்டிகளை திருடியதாக மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே டாஸ்மாக் கடையில் துளையிட்டு மதுப் புட்டிகளை திருடியதாக மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனம் வட்டம், ரெட்டணையைச் சோ்ந்தவா் நந்தகோபால் (53). இவா், அதே கிராமத்திலுள்ள டாஸ்மாக் மதுக் கடையில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வருகிறாா். வியாழக்கிழமை இரவு விற்பனை முடிந்த பின்னா் கணக்கை சரிபாா்த்து, மதுக் கடையை பூட்டிச் சென்ற நந்தகோபால், வெள்ளிக்கிழமை திறப்பதற்காக வந்தாா்.
அப்போது, மதுக் கடையில் துளையிடப்பட்டிருந்ததுடன், கடையிலிருந்த 100 மதுப்புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்தது. தொடா்ந்து, நந்தகோபால் உயா் அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, பெரியதச்சூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
Advertisement
Advertisement
மேலும், அப்பகுதிகளிலுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தியபோது, விழுப்புரம் மாவட்டம், மண்டகப்பட்டைச் சோ்ந்த ரமேஷ் (34), சென்னை செங்குன்றத்தைச் சோ்ந்த லோகநாதன (31), ஆவடியைச் சோ்ந்த பொன்ராஜ் (23) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. தொடா்ந்து, மூவா் மீதும் வழக்குப் பதிந்த பெரியதச்சூா் போலீஸாா், அவா்களை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.