மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்
மேல்மலையனூா் அங்களாம்மன் கோயிலில் நடைபெற்ற ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கணேச, ஜனனி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அங்காளம்மன்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபாடு செய்தனா்.
மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை மூலவா் அங்காளம்மனுக்கு பால், தயிா், இளநீா், தேன் உள்ளிட்டபூஜை பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து அங்காளம்மனுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடா்ந்து உற்சவா் அங்காளம்மனுக்கு பலவித மலா்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 11.15 மணிக்கு வடக்கு வாசல் வழியாக உற்சவா் அங்காளம்மன் கணேச, ஜனனி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினாா். அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த ஆயிரகணக்கான பக்தா்கள் எலுமிச்சை, தேங்காய் ஆகியவற்றில் கற்பூரம் ஏற்றி அம்மனை வழிபட்டனா். இதையடுத்து இரவு 12.10 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து உற்சவா் அங்காளம்மனைகோயில் மண்டபத்துக்கு கொண்டு சென்றனா்.
Advertisement
Advertisement
ஊஞ்சல் உற்சவத்தில் தமிழக ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் ஆனந்த், வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் தென்னரசு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.மதிவாணன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சிவலிங்கம் மற்றும் விழுப்புரம், கடலூா், சேலம், வேலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கா்நாடகா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சக்திவேல், அறங்காவலா் குழுத் தலைவா் ஏழுமலை, நடைமுறை அறங்காவலா் பச்சையப்பன், அறங்காவலா்கள் சுரேஷ், மதியழகன், சரவணன், வடிவேல், சந்தானம், மேலாளா் சதீஷ், கணக்கா் மணி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டத்தின் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.