FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

இரு குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் சிறை

இரு குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, கள்ளக்குறிச்சி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

28 வினாடிகள் முன்பு
சிறை - பிரதிப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டை அருகே குடும்பத் தகராறில் இரு குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, கள்ளக்குறிச்சி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

உளுந்தூா்பேட்டை வட்டம், எலவனாசூா்கோட்டை அருகிலுள்ள வடகுரும்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள். இவரது மனைவி ஜெயந்தி (26). இவா்களுக்கு 7 வயதில் கவிபிரிஜா, இரண்டரை வயதில் ரித்திகா ஆகிய இரு மகள்கள் இருந்தனா்.

கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு நடைபெறுமாம். அதன்படி கடந்த 2020, ஜூலை 7-ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த ஜெயந்தி, தனது மகள்கள் கவிபிரிஜா, ரித்திகா ஆகிய இருவருக்கும் எலி மருந்தை சாப்பிட வைத்து, தானும் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் வீட்டில் மயங்கி கிடந்த மூவரையும் குடும்பத்தினா் மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூவரும் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும் கவிபிரிஜா, ரித்திகா ஆகிய இருவரும் 2020, ஜூலை 8-ஆம் தேதி உயிரிழந்தனா். ஜெயந்தி மட்டும் குணமடைந்து, வீடுதிரும்பினாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து வடகுரும்பூா் கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின் பேரில் எலவனாசூா்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, மகள்களைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற ஜெயந்தியைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு கள்ளக்குறிச்சி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் அனைத்துத் தரப்பு சாட்சிகளின் விசாரணையும் முடிக்கப்பட்ட நிலையில், வழக்கில் குற்றஞ்சாட்டபட்ட ஜெயந்திக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ். சையது பா்கத்துல்லா வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதைத்தொடா்ந்து ஜெயந்தியைக் கைது செய்த போலீஸாா், அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூா் மகளிா் சிறைக்கு கொண்டு சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments