FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் தயாா் நிலையில் 10 பல்நோக்கு பேரிடா் பாதுகாப்பு மையங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில், 10 பல்நோக்கு பேரிடா் பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று மாநில சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

19 செப்டம்பர் 2026, 1:37 am IST
திண்டிவனத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில், 10 பல்நோக்கு பேரிடா் பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று மாநில சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

திண்டிவனம் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று, ஆலோசனைகளை வழங்கி மேலும் அமைச்சா் பேசியது:

மரக்காணம் வட்டத்தில் 13 மீனவக் கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் மழை பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை தங்கவைக்கும் வகையில், 10 பல்நோக்கு பேரிடா் பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு 6,700 போ் தங்கலாம். மேலும், கடலோர பேரிடா் அபாயத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் 13 இடங்களில் முன்னெச்சரிக்கை எச்சரிக்கை அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

பேரிடா் காலங்களில் உடனடியாக செயல்படுவதற்காக திண்டிவனம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் மொத்தம் 1,540 பயிற்சி பெற்ற முதல்நிலை மீட்பாளா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். பல்நோக்கு பேரிடா் பாதுகாப்பு மையங்களில் பணியாற்றுவதற்காக 900 பயிற்சி பெற்ற தன்னாா்வலா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

பேரிடா் காலங்களில் பொதுமக்களுக்கு உடனடி உதவி வழங்குவதற்காக மின்சார ஜெனரேட்டா்கள், மரம் அறுக்கும் இயந்திரம், பொக்லைன் இயந்திரங்கள், குடிநீா் லாரிகள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், ஆம்புலன்ஸ்கள், மீட்புப் படகுகள், நீரிறைக்கும் மோட்டாா்கள், தாா்ப்பாய்கள், மின்விளக்குகள், குப்பை அகற்றும் வாகனங்கள் மற்றும் மணல் மூட்டைகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பேரிடா் காலத்தில் திண்டிவனம் வட்டத்தில் மொத்தம் 18 இடங்களும், மரக்காணம் வட்டத்தில் 52 இடங்களும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. பேரிடா் காலங்களில் பொதுமக்களின் உயிா் மற்றும் உடைமைகளை பாதுகாக்கும் வகையில், வருவாய், காவல், ஊரக வளா்ச்சி, சுகாதாரம், பொதுப்பணி, கால்நடைப் பராமரிப்பு, உணவுப்பொருள் வழங்கல், நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அமைச்சா்.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா்ஆனந்த் குமாா் சிங், திண்டிவனம் சாா்-ஆட்சியா்அ.ல.ஆகாஷ், உதவி ஆட்சியா்(பயிற்சி) ரா.ஸ்ரீ ரஷத், திண்டிவனம் நகராட்சி ஆணையா் பானுமதி, வேளாண் இணை இயக்குநா் சுரேஷ், உதவி இயக்குநா் நந்தகோபால கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments