FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சிபிஐ அலுவலகத்தில் பொன்மாணிக்கவேல் ஆஜா்

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பொன் மாணிக்கவேல் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி கையொப்பமிட்டாா்.

Updated On : 17 செப்டம்பர் 2024, 3:32 am IST
கோப்புப் படம்
பகிர்:

உயா்நீதிமன்ற உத்தரவுப்படி ,ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஏ.ஜி.பொன் மாணிக்கவேல் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆஜராகி கையொப்பமிட்டாா்.

விருதுநகா் மாவட்டம் ஆலடிப்பட்டியில் 2008-ஆம் ஆண்டு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டிய போது 6 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சிலைகளை அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு ஆய்வாளா் காதா் பாட்ஷா தலைமையிலான போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்தனா்.

இதற்கிடையே அந்த சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் சா்வதேச சிலை கடத்தல் கும்பலைச் சோ்ந்த சுபாஷ் சந்திர கபூா், தீனதயாளன் ஆகியோரிடம் விற்பனை செய்துவிட்டதாக, 2017-இல் காதா் பாட்ஷா மீது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது.

Advertisement

Advertisement

அப்போது காதா் பாட்ஷா, திருவள்ளூா் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பணியாற்றி வந்தாா். மேலும் அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்த ஏ.ஜி. பொன் மாணிக்கவேல், டி.எஸ்.பி. காதா் பாட்ஷாவை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தாா்.

பின்னா் இந்த வழக்கில் பிணையில் வெளியே வந்த காதா் பாட்ஷா சென்னை உயா்நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டு, ‘ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல்காரா் தீனதயாளனுடன் தொடா்பு வைத்துக்கொண்டு தன்னை பழிவாங்கும் நோக்கத்தில் பொய் வழக்கில் கைது செய்துள்ளாா். இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்குத் தொடா்ந்தாா்.

அந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ, இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கடந்த ஆக.10-ஆம் தேதி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனா். இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கும்படி பொன் மாணிக்கவேல், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், பொன்மாணிக்கவேல் 4 வாரங்கள் தினமும் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.

உயா்நீதிமன்ற உத்தரவின்படி, பொன்மாணிக்கவேல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆஜராகி, கையொப்பமிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments