FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

23.7.1976: இந்தியா - பாக். இடையே முதல் ரயில் சென்றது - 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் போக்குவரத்து ஆரம்பம்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

Updated On : 23 ஜூலை 2026, 4:09 am IST
23.7.1976 - Dinamani
பகிர்:

அமிருதசரஸ், ஜூலை, 22 - பதினொரு ஆண்டுகளுக்குப் பின் இந்தியா - பாகிஸ்தானுக்குமிடையே இன்று மீண்டும் ரயில் போக்குவரத்து ஏற்பட்டது.

அமிருதசரஸ் லாகூர் எக்ஸ்பிரஸ் இன்று காலை இங்கிருந்து லாகூருக்குப் புறப்பட்டுச் சென்று திரும்பி வந்தது. வழி நெடுகிலும் அதற்கு உற்சாகமான வரவேற்பளிக்கப்பட்டது.

அமிருதசரஸ் எக்ஸ்பிரஸில் இருந்த ரயில்வே துணை மந்திரி மகம்மது குரேஷி, பச்சைக் கொடி காட்டியவுடன் காலை 9-05 மணிக்கு ரயில் புறப்பட்டது. அது கிளம்பியவுடன் ரயில் நிலையத்தில் திரளாகக் கூடியிருந்த மக்கள் கரஒலி எழுப்பினர்.

Advertisement

Advertisement

இந்தப் பாதையில் இந்திய எல்லைக்குள் இருக்கும் கடைசி ஸ்டேஷன் அத்தாரி. அந்த ஸ்டேஷன் அமிருதசரஸிலிருந்து 24 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. எக்ஸ்பிரஸ் ரயில் 35 நிமிஷ நேரத்தில் அத்தாரி போய்ச் சேர்ந்துவிட்டது. வழியில் உள்ள நான்கு ஸ்டேஷன்களிலும் மக்கள் ஏராளமாகக் கூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

அத்தாரி ஸ்டேஷனில் மக்கள் திரளாகக் கூடியிருந்து முறைப்படி ரயிலை பாகிஸ்தானுக்கு வழியனுப்பினார்கள்.

ரயில் வந்தவுடன் பிரபல ஹிந்தி பின்னணிப் பாடகியான லதா மங்கேஷ்கர் "சுபி கபி" என்ற படத்தில் பாடிய ”கபி சுபி மேரே தில் மே" என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது. தேசங்கள் ஒன்றோடு ஒன்று சௌஜன்யமாக இருக்க வேண்டிய தன்மையை அந்தப் பாடல் வலியுறுத்துகிறது. கருத்துச் செறிவுள்ள மற்றும் பல சினிமா பாடல்களும், காலஞ்சென்ற பேகம் அக்தாரின் கஜல்களும், மும்ஜா இத் நியாஸியின் கஜல்களும் ஒலி பரப்பப்பட்டன. ...

... லாகூர் சென்றது

11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தடவையாக இன்று லாகூர் ரயில் நிலையத்துக்கு இந்திய ரயில் வந்தது.

பாகிஸ்தானில் உள்ள தங்கள் உறவினர்களை காண்பதற்காக வந்த 70 இந்திய முஸ்லிம்க உட்பட 141 பயணிகள் அதில் இருந்தனர்.

பாக். ரயில்

அமிர்தசரஸை நோக்கி வந்த முதல் பாகிஸ்தான் ரயிலுக்கு அட்டாரி ரயில் நிலையத்தில் இன்று உற்சாகமான வரவேற்பளிக்கப்பட்டது.

ரயிலிலிருந்து இறங்கிய பிரயாணிகளை துணை ரயில்வே மந்திரி குரேஷி வரவேற்றார். சுமார் 100 பயணிகள் வந்தனர்.

வழியில் உற்சாகமான கூட்டங்களாலும், வழியனுப்பு உபசரிப்புகளாலும் ரயில் 25 நிமிடம் தாமதமாக வந்ததாக ரயில்வே அதிகாரி ராஜ்குமார்தேவன் கூறினார்.

முதல் ரயிலில் இந்தியாவுக்கு வந்த பயணிகள் இரு தேச உறவில் புது திருப்பத்தைப் பாராட்டினர். உறவு வளர அவர்கள் பிரார்த்தித்தனர்.

சிவந்த வானைக் கொண்ட செவ்வாயில் கடும் குளிர்: வைக்கிங் தகவல்

பூமியில் வானம் நீல நிறமாக உள்ளது அல்லவா? ஆனால் செவ்வாய் கிரகத்தில் வானம் சிவப்பாக உள்ளது. காலை நேரத்தில் கடும் குளிர் உள்ளது. குளிர் நிலையானது. நீர் பனிக் கட்டியாக உறையும் நிலைக்கும் கீழாக 122 டிகிரி பாரன்ஹீட் உள்ளது.

செல்வாயில் போய் இறங்கியுள்ள அமெரிக்க விண்வெளி கலத்தின் மூலம் செவ்வாய் பற்றிய முதலாவது வானிலை தகவல்கள் கிடைத்துள்ளன.

செவ்வாயின் வானம் நீலநிறமாக இருப்பதாக வைக்கிங் அனுப்பிய முதல் கலர்ப் படம் காட்டியது. ஆயினும் அக்கிரகத்தில் உள்ள உண்மை நிறங்களைக் காட்டும் வகையில் வைக்கிங் காமிரா முதலில் சரியாக அமையப் பெறாததால் இவ்விதம் அது தவறாக நிறம் எட்டியது என்று வைக்கிங் விண்வெளி திட்ட அதிகாரிகள் கூறினர்.

உண்மையில் செவ்வாயில் வானின் நிறம் சிவப்புதான். அக்கிரகத்தின் அடர்த்தி குறைந்த காற்று மண்டலத்தில் நுண்ணிய துணுக்குகள் மிதப்பதன் விளைவாக சூரிய ஒளி அதன் மீதுபட்டு ஒளிச் சிதறல் ஏற்படுகிறது. எனவே செவ்வாயின் வானம் சிவப்பாக உள்ளது" என்று விஞ்ஞானிகள் விளக்கினர். ...

summary

First train runs between India and Pakistan – service resumes after 11 years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments