24.7.1976: செவ்வாய் கிரக செயற்கைக் கோளில் கோளாறு - ஆய்வுகள் பாதிக்கப்படலாம் என அச்சம்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
பாசடேனோ (யு. எஸ்) ஜூலை 23 - செவ்வாய் கிரகத்தில் இறங்கியுள்ள அமெரிக்க செயற்கைக் கோள் "வைகிங் - லாண்டரின்" செயற்கைக் கை திடீரென்று வேலை செய்யவில்லை; அந்தக் கை இந்த செயற்கைக் கோளில் எங்கேயோ வசமாக சிக்கிக்கொண்டு உள்ளதால் இந்தச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர்ச் சிக்கலினால் செவ்வாய் கிரகத்தில் உயிரினம் உள்ளதா என்பதற்கான ஆராய்ச்சியே பாதிக்கப்படலாம் என்று அமெரிக்காவில் செவ்வாய் கிரக ஆய்வு விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
"வைகிங்" செயற்கைக்கோள் கடந்த செவ்வாயன்று செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக இறங்கியது தெரிந்ததே. அந்த செயற்கைக் கோளில் உள்ள காமிரா கருவிகள் செவ்வாய் கிரகத்தை கறுப்பு - வெள்ளை படமாகவும், வண்ணப் படமாகவும் பிடித்து பூமிக்கு அனுப்பியதும் தெரிந்ததே.
Advertisement
Advertisement
இந்த "வைகிங் லாண்டர்' கலத்தின் முன் புறத்தில் "செயற்கைக் கை” ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. செவ்வாய் பரப்பிலிருந்து மண்ணைத் தனியே சேகரித்து இந்த செயற்கைக்கோளில் போட்டுக்கொள்வதற்காக இந்த செயற்கைக் கை அமைக்கப்பட்டுள்ளது.
இது தானாகவே இயங்கக்கூடியதாகும். இந்தக் கையில் தான் இப்போது திடீர்க் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இந்த செயற்கைக் கையை 17 முறை இயங்கச் செய்து மண்ணை சேகரிப்பதற்கு விஞ்ஞானிகள் முன்னதாகவே திட்டமிட்டிருந்தனர். இதனால் "வைகிங்" கலத்திலிருந்து தானாக வெளியே நீட்டிக்கொள்ளவும் பின்பு அப்படியே உள்ளே மடக்கிக் கொள்ளவும் முடியும்:
இதன்படி விஞ்ஞானிகள் பூமியிலிருந்து இந்த செயற்கைக் கைக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தனர்; விஞ்ஞானிகள் திட்டப்படி 12 பணிகளை இந்த செயற்கைக் கை சொன்னபடி செய்து முடித்தது. ஆனால் 13வது உத்தரவின் போது தான் சிக்கல் ஏற்பட்டது.
செயற்கைக் கையை 10 செமீ நீளத்துக்கு வெளியே நீட்டி அதன் முனையிலுள்ள ஒரு உலோக மூடியை வெளியே உதறிவிட்டு மீண்டும் உள்ளே மடங்கிக் கொள்ளுமாறு விஞ்ஞானிகள் உத்தரவிட்டனர். அவ்வாறே அது இயங்கத் துவங்கியது. ஆனால் மீண்டும் உள்ளே மடங்கிக் கொள்ளாமல் அப்படியே சிக்கிக் கொண்டு நின்று விட்டது. ...
சர்க்காரியா கமிஷனிடம் 128 வாக்குமூலங்கள்
சென்னை, ஜூலை. 23- முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் அறுவர் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட ஊழல் புகார் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சர்க்காரியா விசாரணைக் கமிஷன் முன்பு இதுவரை 128 சத்தியப் பிரமாண வாக்கு மூலங்கள் (அபிடவிட்) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் முன்னணித் தொழிலதிபர்கள், சர்க்கரை ஆலை அதிபர்கள் பெரும் தொழில் நிறுவனங்களின் தலைவர்களாக இருந்தவர்கள், இப்போதும் இருந்து வருபவர்கள் ஆகியோர் இந்த சத்தியப் பிரமாண வாக்குமூலங்களை (அபிடவிட்களை) தாக்கல் செய்துள்ளனர்.
சர்க்காரியா விசாரணைக் கமிஷன் தனது விசாரணையை வருகிற திங்கட்கிழமை (26ம் தேதி) நடத்துவதாக இருந்தது. தற்போது இந்த விசாரணை துவங்கும் நாள் ஆகஸ்ட் 2ம் தேதிக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2ம் தேதி அன்று விசாரணை நடைபெறும். விசாரணையின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், வாக்கு மூலங்களை நேரடியாகப் பதிவு செய்வதா அல்லது "அபிடவிட்' மூலம் ஏற்றுக் கொள்ளலாமா என்பது குறித்து அன்று முடிவு செய்யப்படும். அடுத்த விசாரணை தேதி, இடம் ஆகியவை குறித்தும் முடிவாகும்.
விசாரணைக் கமிஷனின் விசாரணைக்கு ஆளாகி உள்ள முன்னாள் தொழிலமைச்சர் மாதவன் டெல்லி சென்று விசாரணைக் கமிஷன் அலுவலகம் சென்றார். தாக்கல் செய்யப்பட்டுள்ள "அபிடவிட்களில்" விவரங்களைக் குறிப்பெடுத்துக் கொள்ள அவர் விசாரணைக் கமிஷன் அலுவலகம் சென்றார். ...
24.7.1976: Malfunction in Mars satellite – fears that research could be affected.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.