20.9.1976: தகனமா? தைலமா? மாசேதுங் உடல் பற்றி மர்மம் நிலவுகிறது
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
பீகிங், செப். 19 - பீகிங்கில் சீன அதிபர் மா சே-துங் சம்பந்தமான "ஈமச் சடங்குகள்" எல்லாம் முடிவடைந்து விட்டன. ஆனால் அவரது உடம்பு என்ன செய்யப்படும் என்பது இதுவரை வெளியிடப்படவில்லை.
இதற்கு முன்பெல்லாம் காலமான சீன கம்யூனிஸ்ட் தலைவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. ஆனாலும், லெனின் உடலைப் போலவும் ஹோசிமின் உடலைப் போலவும் மா சே-துங் உடல் தைலத்தில் பாதுகாத்து வைக்கப்படும் என்ற ஒரு ஹேஷ்யம் பரவியிருக்கிறது.
நேற்றுச் சுமார் பத்து லட்சம் மக்கள் கொண்ட ஒரு பெரிய கூட்டத்துடன் அதிகாரப்பூர்வமான இரங்கல் முடிந்துவிட்டது. அந்தக் கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு மா சே-துங் உடல் கொண்டு வரப்படவில்லை. சூ-யென்-லாயின் உடல் தகனம் செய்யப்பட்டு, அவருடைய அஸ்தி அவர் விருப்பப்படி ஆறுகளிலும் கிராமப்புற நிலப்பகுதிகளிலும் தூவப்பட்டது. மா சே-துங் கூட, தனது உடலை என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிவித்திருப்பார் என்று பார்வையாளர்கள் நம்புகிறார்கள்.
Advertisement
Advertisement
(சமீபத்திய காலத்தில் சீனாவின் முக்கிய தலைவர்கள் காலமானால் அவர்கள் அஸ்தி பீகிங்கிற்கு மேற்கே உள்ள ஒரு குன்றுப்புறத்தில் உள்ள பாபெளஷான் தியாகிகள் கல்லறையில் வைக்கப்படுவது வழக்கம்).
கடைசியாக மா சே-துங் உடல் வைக்கப்பட்டிருந்த இடம் மக்கள் மண்டபத்தின் நுழைவு அறைதான். அங்குதான் கடந்த ஒரு வார காலமாக 3 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் சென்று தங்கள் அஞ்சலியைச் செலுத்தினார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று ஈமச் சடங்குக்கு முன் மா சே-துங் உடலைச் சுற்றி மக்களின் பிரதிநிதிகள் 100 பேர் கூடியிருந்த "பிரிவுபசாரக் கூட்டம்" ஒன்று நடந்தது. அவர்கள் அனைவரும் முஷ்டிகளை உயரத்தூக்கி, சீனப் புரட்சிக்குத் தங்களுடைய விஸ்வாசத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
இன்று அந்த மண்டபத்தின் வடக்குக் கதவுகள் மூடப்பட்டு விட்டன. கடந்த சில தினங்களாக இருந்த காவல் அகற்றப்பட்டு விட்டது. அந்த இடத்தைச் சுற்றி வேறு விசேஷம் எதுவும் காணோம்.
Cremation or Embalming? Mystery Surrounds Mao Zedong's Body.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.