FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு அக். 1 முதல் புதிய நடைமுறை: ஆர்பிஐ

பண அட்டைகளின் விவரங்களை பாதுகாக்கும் வகையில் இணையதள வழியில் பயன்படுத்துவதற்கு தனி அடையாளப்படுத்தும் முறையை (டோக்கனைசேஷன்) ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது.

Updated On : 15 செப்டம்பர் 2022, 5:34 pm IST
ஆர்பிஐ தரும் விளக்கம்
பகிர்:

கிரெடிட் மற்றும் டெபிட் போன்ற பண அட்டைகளின் விவரங்களை பாதுகாக்கும் வகையில் இணையதள வழியில் பயன்படுத்துவதற்கு தனி அடையாளப்படுத்தும் முறையை (டோக்கனைசேஷன்) ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது.

இந்த நடைமுறை வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே, இந்த டோக்கனைசேஷன் முறைக்கு கடந்த ஜூலை 1ஆம் தேதியை ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருந்த நிலையில், தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்படுத்த வணிகர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால், நடைமுறைப்படுத்தும் தேதி அக்டோபர் 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

டோக்கனைசேஷன் என்றால் என்ன?

Advertisement

Advertisement

பண அட்டைகளுக்கு டோக்கனைசேஷன் முறை கொண்டு வரப்பட்டால், ஒரு பண அட்டை என்பதை அதன் சிவிவி எண் போன்ற விவரங்களைக் கொண்டு அறியும் முறைக்கு மாற்றாக, அந்தப் பண அட்டைக்கென்று வழங்கப்படும் டோக்கன் எண் மூலம் அறியப்படும். இந்த டோக்கன் எண் என்பது, அந்த அட்டையின் விவரங்கள் மற்றும் டோக்கனைசேஷன் கோரிக்கையை மேற்கொள்ளும் நிறுவனத்தின் விவரங்களின் ஒரு கூட்டுத் தொகுப்பாக இருக்கும். 

உங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளை டோக்கன் முறைக்கு மாற்றுவதற்கு வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைக்க வேண்டும். அவ்வாறு கோரிக்கை வைக்கும் பயனாளர்களின் கார்டுகள் மட்டுமே டோக்கனைசேஷன் செய்யப்படும். இதற்காக பயனாளர்கள் எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியது இருக்காது. அதன்பிறகு, ஒரு பண அட்டையின் தனிப்பட்ட தகவல்கள் பிரத்யேகமாக பாதுகாப்பாக வைக்கப்படும். அந்த கார்டுகள் டோக்கன் முறைக்கு மாற்றப்படும்.

இந்த டோக்கன் எண் என்பது, அந்த அட்டையின் நேரடியான விவரங்களைக் கொண்டிருக்காது. இணையதள பணப்பரிவர்த்தனையின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த டோக்கன் எண் அவ்வப்போது மாற்றியமைக்கப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

ஒரு கிரெடிட் அல்லது டெபிட் அட்டை டோக்கனைசேஷன் செய்யப்பட்டுவிட்டால், அந்த அட்டையின் விவரங்களை, வணிகர்களோ, பணப் பரிமாற்ற செயலிகளோ, இணையதள விற்பனை நிறுவனங்களோ, அந்த அட்டையின் சிவிவி எண், அந்த அட்டை காலாவதியாகும் தேதி மற்றும் இதர விவரங்களையும் சேமித்து வைத்துக் கொள்ள முடியாது. 

ஏற்கனவே, வங்கிகள் அல்லது ஆன்லைன் வணிக நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு பண அட்டையை டோக்கனைசேஷன் செய்யும் முறை குறித்து தகவல்களை அனுப்பியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments