ஆபாசமாக, கீழ்த்தரமாகப் பேசுவதுதான் திமுக டிஎன்ஏ: அமைச்சர் ரமேஷ்
திமுகவினர் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருப்பதாக அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டியது குறித்து...
திமுகவினர் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருப்பதாக அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
தவெக ஆட்சியில் ரூ. 1 லட்சம் கோடிக்கு ஈர்க்கப்பட்ட தொழில் முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடாமல், வேறு யாருடனோ முதல்வர் விஜய் சுற்றி வருவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததாகக் கூறி, அமைச்சர் ரமேஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களுடன் அமைச்சர் ரமேஷ் பேசியதாவது, "அரசியல், கருத்தியல் ரீதியான கேள்விகளுக்கு பதில் சொல்லலாம். வீட்டில் அமர்ந்துகொண்டு வாய்க்கு வந்தவற்றையெல்லாம் பேசலாம் என நினைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் இதெல்லாம் ஒரு அரசியல் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது.
Advertisement
Advertisement
முதல்வர் விஜய் மிகத் தெளிவாக ஆட்சி நிர்வாகம் நடத்தி வருகிறார். அனைவரும் பாராட்டக் கூடிய வகையில் ஆட்சி நிர்வாகம் நடத்தி வருகிறார். உலகளவில் விளையாட்டுத் துறையில் தமிழர்கள் சாதிக்க வேண்டும் என முதல்வர் விரும்புகிறார்.
மற்றவர்கள் விமர்சனத்துக்காக எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். அதனால்தான் எதிர்க்கட்சியாகக்கூட அமர முடியாத நிலைமையில் உள்ளனர்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, முதல்வரை திமுகவினர் ஒருமையில் பேசியது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து அமைச்சர் ரமேஷ் பேசியதாவது, "ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவது என்பது ஜனநாயக உரிமை. இதனை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அவதூறாகவும் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும்தான் பேசுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். திமுக இவ்வாறு செய்யவில்லை என்றால்தான் ஆச்சரியம். திமுகவின் டிஎன்ஏ-வே அதுதான்.
ஆபாசமாகவும், அவதூறாகவும், கீழ்த்தரமாகவும் பேசுவதுதான் திமுகவின் டிஎன்ஏ. இப்படித்தான் திமுக முன்னாள் அமைச்சர்கள் எல்லோரும் வளர்ந்துள்ளனர்.
அப்படித்தான் கட்சியை முன்னாள் கொளத்தூர் எம்எல்ஏ (மு.க. ஸ்டாலின்) வளர்த்துள்ளார். அதற்கு சொந்த உதாரணம், அவரது மகனே.
அவரே (உதயநிதி) இரட்டை அர்த்தத்தில் பேசுவதும், கேவலமான மற்றும் கீழ்த்தரமான விமர்சனங்களை வைப்பதும், அமைச்சர்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவது போன்ற வேலைகளைத்தான் அவர் செய்து வருகிறார்.
முதல்வரை மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள், பெண்கள் என யாரையும் தரக்குறைவாகப் பேசினாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
DMK members have a habit of using obscene and vulgar language, says Minister Ramesh
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.