புது வகை ஆன்லைன் மோசடி! ரூ. 60 லட்சத்தை இழந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி! எப்படி நடந்தது?
'இணையவழி கைது' எனும் ஆன்லைன் மோசடியால் உத்தர பிரதேச ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ரூ. 60 லட்சம் இழப்பு.
உத்தர பிரதேசத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி 'இணையவழி கைது' எனும் ஆன்லைன் மோசடியால் ரூ. 60 லட்சத்தை இழந்துள்ளார்.
'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் இணையவழி ஆன்லைன் பண மோசடி அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த இந்திய உணவுக் கழகத்தின் ஓய்வு பெற்ற அதிகாரி ப்ரீதம் சிங்கை சுமார் 6 நாள்கள் 'டிஜிட்டல் காவலில்' வைத்து ரூ. 60 லட்சம் பணம் பறித்துள்ளனர்.
Advertisement
Advertisement
அக்டோபர் 10ஆம் தேதி தங்களை தில்லியின் சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் என்று கூறி ப்ரீதம் சிங்கை விடியோ அழைப்பு மூலமாக தொடர்பு கொண்டுள்ளனர்.
ப்ரீதம் சிங், குழந்தைக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ. 68 கோடி பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், அதில் ரூ. 68 லட்சம் குழந்தைக் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் பொய்க் குற்றச்சாட்டு கூறி 'டிஜிட்டல் காவல்' என்று ஆன்லைனில் இருக்க வைத்துள்ளனர்.
இந்த வழக்கு பற்றி யாருடனும் தெரிவிக்க வேண்டாம் என்று கூறியதுடன், விசாரணை என்ற பெயரில் தொடர்பை துண்டிக்கக்கூடாது என 6 நாள்கள் ஆன்லைனில் இருக்க வைத்துள்ளனர்.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமானால் பணம் தரக் கோரியுள்ளனர். அதன்படி, ரூ. 60 லட்சத்தை பல வங்கிக்கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்ய வைத்துள்ளனர். இதையடுத்து விடியோ அழைப்பு துண்டிக்கப்பட்டது.
இதன்பின்னர் மேலும் ரூ. 50 லட்சம் கேட்கவே பணம் திரட்ட முடியாமல், சந்தேகத்தின்பேரில் ப்ரீதம் சிங் புகார் அளிக்க முடிவு செய்து சைபர் குற்றப் பிரிவில் புகாரளித்தார்.
இவர்கள் போலி அதிகாரிகள் என்று போலீசார் உறுதி செய்தனர். தொடர்ந்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ப்ரீதம் சிங் மீது சிபிஐ, ஏற்கனவே பணமோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளது. சிபிஐ-யால் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக ப்ரீதம் சிங், சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ப்ரீதம் சிங் மீது சிபிஐ ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்துள்ளதால் அந்த குற்றத்தைப் பயன்படுத்தி அவரை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது.
உங்களுக்கும் இதுபோன்ற விடியோ அழைப்பு வந்தால் உடனடியாக அழைப்பை துண்டித்துவிட்டு சைபர் குற்றப்பிரிவில் 1930 என்ற எண்ணுக்கு அழைத்து புகார் அளியுங்கள்.
'டிஜிட்டல் அரெஸ்ட் என்பது என்ன? இந்த மோசடி எப்படி நடக்கிறது? விரிவாகப் படிக்க இங்கே அழுத்தவும்...