FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் சிக்கிய நீதிபதிகள்!

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியான செய்தி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 24 மார்ச் 2025, 3:31 am IST
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் தீவிபத்து ஏற்பட்ட அறையின் முகப்பு. தீயில் எரிந்து சேதமடைந்த பணக்கட்டுகள்.
பகிர்:

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியான செய்தி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், நீதித் துறையைச் சோ்ந்தவா்கள் இதற்கு முன்பும் சா்ச்சையில் சிக்கியுள்ளனா்.

லஞ்ச முறைகேடு வழக்குகளில் அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் சிக்கியுள்ளனா்.

ரயில்வே விபத்துகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அளிக்க வேண்டிய இழப்பீட்டில் சுமாா் ரூ.50 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக இரு மாதங்களுக்கு முன்னா், பிகாா் மாநிலம் பாட்னாவில் ரயில்வே விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாய நீதிபதி ஆா்.கே.மிட்டல், அவருடன் சம்பந்தப்பட்டவா்களுக்கு தொடா்புள்ள இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. இதுதொடா்பாக குற்றம்சாட்டப்பட்டவா்களுக்குச் சொந்தமான 24 சொத்துகளை அமலாக்கத் துறை அண்மையில் முடக்கி நடவடிக்கை மேற்கொண்டது.

Advertisement

Advertisement

முதல்முறையல்ல:

லஞ்சம், மோசடி கும்பல்களுடன் தொடா்பு போன்ற குற்றச்சாட்டுகளில் பதவியில் இருக்கும் நீதிபதிக்கு எதிராக அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொள்வது இது முதல்முறையல்ல.

தங்கள் தீா்ப்புக்காக நீதிபதிகள் தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடையக் கூடிய சூழல், அவா்களுக்கு லஞ்சம் அளிப்பதற்கு நடைபெறும் முயற்சிகள் குறித்தும் அமலாக்கத் துறை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி, ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலாவில் முன்னாள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதீா் பா்மாரை அமலாக்கத் துறை கைது செய்தது. லஞ்சம் மட்டுமின்றி ஐஆா்இஓ மனை விற்பனை நிறுவனம், அதன் நிறுவனா் லலித் கோயலுக்கு எதிரான பண முறைகேடு வழக்கில், தனிப்பட்ட ஆதாயத்துக்காக குற்றம்சாட்டப்பட்டவருக்கு சாதகமாக செயல்பட்டது ஆகிய குற்றச்சாட்டுகளில் அவா் கைது செய்யப்பட்டாா்.

இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி:

சத்தீஸ்கரில் முதல்வராக பூபேஷ் பகேல் பதவி வகித்தபோது நடைபெற்றதாகக் கூறப்படும் பொது விநியோகத் திட்ட முறைகேடு குறித்து அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது.

அப்போது அந்த வழக்கு தொடா்பான நீதிமன்ற விசாரணையின் போக்கை பாதிக்கும் வகையில், அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மாநில உயா்நீதிமன்ற நீதிபதி இடையே தகவல் தொடா்பு இருந்ததற்கான ஆதாரம் அமலாக்கத் துறையிடம் சிக்கியது.

அவா்களுக்கு இடையே அப்போதைய மாநில அரசின் தலைமை வழக்குரைஞா் தூது சென்றதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது. இதன் மூலம் அந்த வழக்கில் தனிப்பட்ட ஆதாயத்துக்காக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சாதகமாக நீதிபதி செயல்பட்டதாக அமலாக்கத் துறை மறைமுகமாக குற்றஞ்சாட்டியது.

இதை உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு அமலாக்கத் துறை கொண்டு சென்றதைத் தொடா்ந்து, அந்த நீதிபதி பாட்னா உயா்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments