திருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதி
திருச்சூர் வெடிவிபத்து தொடர்பாக, பட்டாசுகளின் வடிவமைப்பில் மாற்றம் ஏற்படுத்த முன்னாள் நீதிபதி ராமச்சந்திரன் நாயர் பரிந்துரை
கேரளத்தில் வெடிவிபத்து தொடர்பாக, பட்டாசுகளின் வடிவமைப்பில் மாற்றம் ஏற்படுத்த முன்னாள் நீதிபதி ராமச்சந்திரன் நாயர் பரிந்துரைத்துள்ளார்.
கேரளத்தில் ஏப்ரல் 26-ல் நடைபெறவுள்ள பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் விழாவுக்காக பாதுகாக்கப்பட்டு வந்த பட்டாசுகள் கடும் கோடை வெய்யிலில் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, வெடி விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள கேரள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சி.என். ராமச்சந்திரன் நாயர் தலைமையில் தனிநபர் ஆணையம் அமைக்க மாநில அரசு முடிவு செய்தது.
Advertisement
இந்த நிலையில், வெடிவிபத்து தொடர்பாக செய்தியாளர்களுடன் சி.என். ராமச்சந்திரன் நாயர் பேசுகையில், "திருச்சூர் பட்டாசு வெடிப்பில் பலர் இறந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று நம்புகிறோம்.
எதிர்காலத்தில் இதுபோன்ற பேரழிவு மீண்டும் நிகழாமலிருப்பதை உறுதிசெய்வதே ஆணையத்தை அமைப்பதன் அரசின் நோக்கம்.
கோயில் திருவிழாக்களில் பட்டாசுகளும் முக்கிய பங்களிக்கின்றன. அவை உலகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
சீனாவில் அதிக சத்தம் அல்லது வெடிப்புகளைக் கொண்ட பட்டாசுகளைவிட காட்சிக்கான பட்டாசுகளிலேயே (வாண வேடிக்கை பட்டாசுகளைப்போல) கவனம் செலுத்துகின்றனர்.
அவர்களைப்போல, நாமும் பட்டாசுகளின் வடிவமைப்பை மாற்றியமைக்க முடியும். நாங்கள் இதை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவோம்.
இந்த ஆணையம், பட்டாசுகள் மீது தடையைப் பரிந்துரைக்கும் நோக்கம் கொண்டதல்ல. அவற்றைத் தடை செய்வது அல்லது முற்றிலுமாக நிறுத்துவது என்பது பொருத்தமானதாக இருக்காது" என்று தெரிவித்தார்.