மகளிர் இடஒதுக்கீடு மசோதவை ஆதரிக்க எதிர்க்கட்சிகளுக்குப் பிரதமர் வேண்டுகோள்!
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டுகோள் விடுப்பது பற்றி..
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கட்சிகள் ஆதரிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.
அரசியலமைப்பு (131-வது திருத்த) மசோதாவானது 2029 ஆம் ஆண்டில் சட்டப்பேரவைகள் மற்றும் மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடை அமல்படுத்தவும், மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 543-லிருந்து 816-ஆக அதிகரிக்கவும் வகை செய்கிறது.
இந்த முன்மொழியப்பட்ட சட்டத்தை மக்களவையில் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது.
Advertisement
Advertisement
சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையிலிருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய மோடி, இந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான பெருமையை அரசியல் கட்சிகளே பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார்.
தேசியக் கொடியின் நிழலில் நின்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். பெண்களைக் கௌரவிக்கும் வகையில் நாம் ஒன்றிணைவோம்; சட்டப்பேரவை மற்றும் மக்களவையில் தாய்மார்கள், சகோதரிகளுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி அவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வோம். இதன் மூலம் இந்தியாவின் கொள்கை உருவாக்கத்தில் அவர்கள் பங்களிக்க முடியும் என்று கூறிய அவர், இது காலத்தின் கட்டாயம் என்றும் குறிப்பிட்டார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்தவும், பெண்களைக் கௌரவிக்கவும் முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் நாள் வலியுறுத்துகிறேன். இந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான பெருமையை அவர்கள் பெற்றுக்கொள்ளலாம் அதில் பங்களிக்கலாம்; ஆனால் அந்த உரிமையை நமது பெண்களுக்கு வழங்க வேண்டும். பெண் சக்தியைப் போற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
முன்னதாக, ஏப்ரல் 17 அன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, மக்களவையில் இந்த அரசியலமைப்புத் திருத்த மசோதா தோல்வியடைந்ததால் மோடி அரசு பின்னடைவைச் சந்தித்தது. மக்களவையில் வாக்களித்த 528 எம்.பி.க்களில், 298 பேர் ஆதரவாகவும், 230 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு இந்த மசோதாவுக்கு 352 வாக்குகள் தேவைப்பட்டன.
சர்ச்சைக்குரிய இந்த மசோதா தோல்வியடைந்த மறுநாளே, தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த பின்னடைவுக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடினார்.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடவடிக்கையை மேற்கொண்டு, 2029-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில், மக்களவை இடங்களை 816-ஆக உயர்த்தும் 131-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா முன்மொழியப்பட்டது.
மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் வகையில், மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளின் இடங்களையும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
சமீபத்தில் நிறைவடைந்த நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; ஆனால், மசோதாவை நிறைவேற்றத் தேவையான எண்ணிக்கையிலான ஆதரவை அரசால் திரட்ட முடியவில்லை.
காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார்; இருப்பினும், அவரிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. அரசின் சார்பில் மசோதா தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டவர்கள் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களிடமும் பேசினர். ஆனால், யாரும் மசோதாவை ஆதரிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.