இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ஆவணப்படத்தை விமர்சித்த பாகிஸ்தான் ராணுவம்!
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய ஆவணப்படம் ஒருதலைபட்சமான தகவல்களுடன் எடுக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய ஆவணப்படம் போர் தொடர்பான கள யதார்த்தங்களைப் புறக்கணித்துவிட்டு ஒருதலைபட்சமான தகவல்களுடன் எடுக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதன்படி, கடந்தாண்டு மே 7 அன்று பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பல்வேறு பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் துல்லியமான தாக்குதல்களை நடத்தினர். அணு ஆயுத வல்லமை கொண்ட இரு நாடுகளுக்கிடையே நடைபெற்ற இந்த மோதல் சுமார் 4 நாள்கள் வரை நீடித்தது. இரு தரப்பினருக்கும் மே 10 அன்று ஒரு புரிதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மோதல் முடிவுக்கு வந்தது.
இந்தியாவின் ’ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை டிஸ்கவரி தொலைக்காட்சியில் 'டிக்ளாசிஃபைட்: ஆபரேஷன் சிந்தூர்' என்கிற ஆவணப்படமாக வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
88 மணி நேரம் நீடித்த மோதல் தொடர்பான நிகழ்வுகளை இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் விவரிப்பதாக இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு பாகங்களைக் கொண்ட இந்த ஆவணப்படத்தில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசுகையில், ”இந்தியாவின் தாராள மனப்பான்மையையும் சகிப்புத்தன்மையையும் அதன் பலவீனமாகக் கருதக்கூடாது. விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் துணிச்சலான முடிவுகளை எடுத்து, எதிரிக்குக் கடுமையான பதிலடித் தாக்குதல் கொடுக்க இந்தியாவால் முடியும். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமான எதிரிகளின் முகாம்களை அழிப்பதே இந்த ராணுவ நடவடிக்கையின் நோக்கம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான 'இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ்', இந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு ஆதரவான கோணத்தில் நடந்த சம்பவங்களை மிகைப்படுத்திக் காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோல, இந்த நடவடிக்கை ஒரு ராணுவ வெற்றி என இந்தியா குறிப்பிட்டதையும் பாகிஸ்தான் மறுத்துள்ளது. அந்த அறிக்கையில், “ஒரு தோல்வியடைந்த முயற்சியில் தோல்வியை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, தனக்கு விருப்பமான முறையில் வரலாற்றைத் திரித்துக்கூற இந்தியா முடிவு செய்துள்ளது. வரலாற்றை மறைக்க இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் ராணுவத் தலைமை அதிகாரிகளைக் கொண்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைப் பற்றி நாடகத்தனமான, மிகைப்படுத்தப்பட்ட விஷயத்தை ஆவணப்படமாக உருவாக்கியுள்ளனர். அதில், எந்த நுணுக்கமும் தீவிரத்தன்மையும் இல்லாததால் அதனை ஒரு சோகமான மற்றும் நகைச்சுவையான படம் என வகைப்படுத்தலாம்” என்று தெரிவித்திருந்தனர்.
மேலும், ”எதிர்காலத்தில் பாகிஸ்தான் மீது மேற்கொள்ளப்படும் எந்தவொரு தவறான ராணுவ நடவடிக்கைகளுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும். அதன் பின்னர், திரைப்படங்களில் காட்டப்படும் எந்தவொரு பொய் சாட்சியமும் இந்தியாவை காப்பாற்ற முடியாது” என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
Pakistan Army criticized India's Operation Sindoor documentary!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.