‘பாஜகவின் முடிவைக் காணும் வரை நான் உயிரோடுதான் இருப்பேன்’ - மமதா சவால்!
பாஜகவின் முடிவைக் காணும் வரை நான் உயிரோடுதான் இருப்பேன் என்று மமதா பானர்ஜி சவால் விடுத்துள்ளதைப் பற்றி...
என்னை அழிக்க நீங்கள் நினைக்கலாம்; ஆனால், உங்கள் முடிவைக் காணும் வரை நான் உயிரோடுதான் இருப்பேன் என்று பாஜகவுக்கு மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி சவால் விடுத்திருக்கிறார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மமதா ஆதரவு அணி, அதிருப்தி அணி என கட்சி இரண்டாகப் பிரிந்தது.
இதையடுத்து, மமதா பானர்ஜியின் ஆதரவுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்த பலரும் பாஜகவில் சேர்ந்தனர். மேலும், திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா பானர்ஜி நீக்கப்பட்டு புதிய தலைவராக ரிதப்ரதா தேர்வு செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement
அதைத்தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான மதன் மித்ரா, மமதா பானர்ஜி தலைமையிலான அணியிலிருந்து விலகி, ரிதாப்ரதா பானர்ஜி தலைமையிலான எதிரணியில் இணைந்தார். தனது இந்த முடிவுக்கு அபிஷேக் பானர்ஜியின் தலைமையே காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், நிர்வாகிகள் விலகுவது குறித்த கவலைகளுக்கு மத்தியில், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான மமதா பானர்ஜி, இன்று (ஜூலை 15) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “அபிஷேக் பானர்ஜி எந்தத் தவறும் செய்யவில்லை. அடுத்த 50 ஆண்டுகளுக்கு அவர் அரசியலில் நீடிப்பார். அவர்கள் அபிஷேக் பானர்ஜியிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். கட்சியிலிருந்து விலகுபவர்கள் அவரை விமர்சிக்கவே அவரைக் குறிவைக்கின்றனர்.
தங்கள் கட்சியில் சேர வேண்டும் என்பதற்காக திரிணமூல் எம்.எல்.ஏ.க்களை காவல் துறையைப் பயன்படுத்தி வருகிறது பாஜக. திரிணமூல் காங்கிரஸ் கட்சியை மீண்டும் கட்டமைக்க நான் தயாராக இருக்கிறேன்.
எனக்கு மாரடைப்பு ஏற்பட்டு நான் இறந்துபோக வேண்டும் என்று பாஜகவினர் விரும்புகின்றனர். ஆனால், உங்கள் முடிவைப் பார்க்கும் வரை நான் உயிருடன்தான் இருப்பேன்.
சிலர்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவதால் எங்கள் கட்சி பலவீனமடையாது. மக்களின் அன்பே எங்களின் முதன்மையானது என்பதால், எங்கள் போராட்டத்தைத் தொடர்வோம்” என்றார் மமதா.
Trinamool Congress (TMC) chief Mamata Banerjee attacked Bharatiya Janata Party (BJP) on Wednesday after suffering another blow as MLA Madan Mitra joined the rebel camp on Wednesday. "Those who want to go can go," she said, adding that she has a message for the BJP.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.