நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை திமுக புறக்கணித்தது பற்றி...
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு உடை அணிந்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திய நிலையில், அந்தப் போராட்டத்தை திமுக புறக்கணித்துள்ளது.
தேசிய தேர்வு முகமை நடத்தும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு உள்பட பல தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டம் நடத்தி வருகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபி கட்சியினர் அமைதிப் பேரணி நடத்தினர். நாடாளுமன்ற சாலையில் நுழையும்போதே, காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். மாணவர்கள், பெண்கள் உள்பட பலரின் மீதும் தடியடி நடத்தினர். இதில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், தொடர்ந்து நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தி, பிரதமர் மோடியின் வீட்டுக்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, காவல்துறை வரவழைக்கப்பட்டு, அவர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
அப்போது ராகுல் காந்தியின் மூக்கில் ரத்தம் வந்த காட்சிகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இன்று பங்கேற்க வந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் அனைவரும் கருப்பு உடையில் வருகை தந்தனர்.
மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களும், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரியும், சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவாகவும், ராகுல் காந்தி மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் திமுக எம்பிக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. மேலும், கருப்பு உடை அணியாமல் சாதாரண உடையிலேயே நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தது பேசுபொருளாகியுள்ளது.
Opposition parties protest in Parliament! DMK boycotts!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.