காரணம் கூறாமல் 3 மாதம் சிறை! தில்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்!
தில்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்த காவல் ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது பற்றி...
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், தில்லியில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு காவல் ஆணையருக்கு துணைநிலை ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.
நீட் தோ்வு உள்பட பல்வேறு தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்த முயன்ற சிஜேபி ஆதரவாளர்களை காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டு வீசியும் தாக்குதல் நடத்தினர்.
Advertisement
Advertisement
இதற்கு மத்தியில், ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வரும் சிஜேபிக்கு நாளுக்குநாள் ஆதரவு அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், சட்டம் - ஒழுங்கை கருத்தில் கொண்டு, தில்லியில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு காவல் ஆணையர் அனுராக் குமாருக்கு, துணைநிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சந்து அனுமதி அளித்துள்ளார்.
இந்தச் சட்டத்தை ஜூலை 19, 2026 முதல் அக்டோபர் 18,2026 வரையிலான மூன்று மாதக் காலத்துக்கு அமல்படுத்துவதற்கான அதிகாரம் காவல் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியப் பாதுகாப்புச் சட்டம் (என்.எஸ்.ஏ.) என்றால் என்ன?
தேசியப் பாதுகாப்புச் சட்டம், 1980-ன் கீழ், நாட்டின் பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தனி நபர்களை, காரணம் கூறாமல் மூன்று மாதங்கள் வரை சிறையில் அடைக்கலாம்.
இது வழக்கமான குற்றவியல் வழக்கு நடைமுறைகளிலிருந்து மாறுபட்டது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், உடனடியாகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. கடுமையான சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளில் ஈடுபடுவார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் அடையாளம் காணும் எவரையும் முன்னெச்சரிக்கையாக கைது செய்ய வழிவகுக்கிறது.
சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும்போது, மாவட்ட ஆட்சியர்கள் அல்லது காவல் ஆணையர்கள் இந்தச் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள்.
Three months' imprisonment without stated grounds - National Security Act invoked in Delhi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.