FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்... உயர் கல்வித்துறை செயலாளர் பணியிட மாற்றம்

மத்திய கல்வித்துறை செயலாளர் வினீத் ஜோஷி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

Updated On : 24 ஜூலை 2026, 12:52 pm IST
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) தலைமையில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள். - கோப்புப்படம்
பகிர்:

கடந்த சில நாள்களாக மருத்துவப் படிப்புகளுக்கான நீட்-யுஜி வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) தலைமையில் தொடா் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய கல்வித்துறை செயலாளர் வினீத் ஜோஷி பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் தொடங்கிய கடந்த திங்கள்கிழமை நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின்கீழ் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் ஒன்றுதிரண்டு நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தியதுடன், கண்ணீா் புகை குண்டுகளை வீசி கலைத்தனா். இருதரப்புக்கும் இடையே வெடித்த மோதலில் ஏராளமான போராட்டக்காரா்களும், 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரும் காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, நாடாளுமன்றத்திலும் எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டுள்ளன.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், உயர்கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய உயர்கல்வித் துறை செயலாளராக நரேஷ் பால் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார், பள்ளிக்கல்வித் துறை செயலாளராக டி.கே. அனில்குமார் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி உறுதியளித்தபடி, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக, தில்லி உயர்நீதிமன்றம் விரைவு நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டுள்ளது. விரைவு நீதிமன்றத்தின் நீதிபதியாக அனு குரோவர் பாலிகா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாள்களாக 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' தலைமையிலான மாணவர் போராட்டங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதை அடுத்து மத்திய அரசு இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி வியாழக்கிழமை நள்ளிரவு வீடியோ பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி 5-வது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ், சமாஜவாதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்கக் கோரி இன்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து, பகல் 12 மணி வரை இரு அவைகளின் நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

summary

the Centre on Thursday shifted Higher Education Secretary Vineet Joshi to the Ministry of Panchayati Raj, and appointed two new Secretaries in the Ministry of Education

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments