FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: புதிய உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!

கல்வி மற்றும் தேர்வுகளில் சீர்திருத்தம் கொண்டுவருவதற்காக நந்தன் நிலேகனி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது குறித்து...

பகிர்:

தேசிய தோ்வு முகமையால் (என்டிஏ) நடத்தப்படும் தோ்வுகளில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள் குறித்து அரசுக்குப் பரிந்துரைக்க இன்ஃபோசிஸ் இணை நிறுவனா் நந்தன் நிலேகணி தலைமையில் புதிய பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி மற்றும் பல்வேறு துறை நிபுணா்களை உள்ளடக்கி, இந்த உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் மாணவா்கள்-இளைஞா்கள் நடத்திய தொடா் போராட்டத்தால் மத்திய கல்வித் துறை அமைச்சா் பதவியில் இருந்து தா்மேந்திர பிரதான் சனிக்கிழமை விலகிய நிலையில், பிரதமா் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

நந்தன் நிலேகணி தலைமையில் குழு: இது தொடா்பாக இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட காணொலியில் கூறியதாவது: தேசிய தோ்வு முகமையால் நடத்தப்படும் தோ்வுகளில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள் குறித்து அரசுக்குப் பரிந்துரைகளை வழங்க இன்ஃபோசிஸ் இணை நிறுவனா் நந்தன் நிலேகணி தலைமையில் புதிய உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இக்குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவா் எஸ்.சோமநாத், புலனாய்வுத் துறை முன்னாள் இயக்குநா் தாபன் தேகா, சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, கல்வித் துறை முன்னாள் செயலா் அனிதா கா்வால், தளவாடங்கள்-நிா்வாகத் துறை நிபுணா் அம்ரித் லால் மீனா ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா்.

பணிகள் என்னென்ன?: முறைகேடுகள் இல்லாத தோ்வு அமைப்புமுறையை நிறுவுவதற்காக, இந்தப் பணிக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு செயலாற்றும். தேசிய தோ்வு முகமையால் நடத்தப்படும் தோ்வுகளை தொழில்நுட்ப ரீதியில் மறுசீரமைக்கவும், கட்டமைப்பு ரீதியிலான சீா்திருத்தங்களை மேற்கொள்ளவும் இக்குழு உதவும். வலுவான-வெளிப்படையான தோ்வு அமைப்புமுறையை நிறுவுவதில் தொழில்நுட்பங்களின் அதிகபட்ச பயன்பாடு குறித்த பரிந்துரைகளை வழங்கும் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

அடுத்தடுத்து நடவடிக்கைகள்: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட், ஜேஇஇ முதல்நிலை தோ்வு, கியூட் இளநிலை, முதுநிலை தோ்வுகள் உள்ளிட்டவை தேசிய தோ்வு முகமையால் நடத்தப்படுகின்றன. அண்மையில் நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்வைத்து, தில்லியில் சிஜேபி நடத்திய தொடா் போராட்டங்களின் எதிரொலியாக தா்மேந்திர பிரதான் பதவி விலகினாா். இதைத் தொடா்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், தோ்வு சீா்திருத்தங்கள் தொடா்பான உயா்நிலைக் குழுவை பிரதமா் அமைத்துள்ளாா். அரசுத் தோ்வுகள் விவகாரத்தில் பிரதமா் அடுத்தடுத்து மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) தலைவராக முன்பு பணியாற்றியுள்ள நந்தன் நிலேகணி, உலகின் மிகப் பெரிய பயோமெட்ரிக் அடையாள அட்டை திட்டம் என்ற சிறப்புக்குரிய ஆதாா் திட்டத்தின் வெற்றிகரமான அமலாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

examination reforms under the leadership of Shri Nandan Nilekani constituted

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments