கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்துக்கு ராகுல் இன்று ஒப்புதல்?
50 நாள்களுக்கும் மேலாக நிரப்பப்படாத கர்நாடகத்தின் புதிய அமைச்சரவை குறித்து...
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து துணை முதல்வராகப் பதவி வகித்து வந்த டி.கே. சிவகுமார் கடந்த ஜூன் 3 அன்று முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, கர்நாடகத்தின் புதிய அமைச்சரவை முழுதுமாக நிரப்பப்படாத நிலையில், பல்வேறு முக்கிய துறைகளின் பணிகள் தாமதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோருடன் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதில், கர்நாடகத்தின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடையே புதிய அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாகப் போட்டி நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர்களுக்கும், டி.கே. சிவகுமாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே நிலவும் இந்தப் போட்டியால் புதிய அமைச்சரவையின் விரிவாக்கத்தில் இழுபறி நிலவுகிறது.
கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பிகே ஹரிபிரசாத், முதல்வர் டி.கே. சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) மாலை காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபாலுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், அமைச்சரவையில் இடம்பெற விரும்பும் உறுப்பினர்களுடன் கே.சி. வேணுகோபால் நேரடியாகப் பேச்சுவார்த்தை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக புதிய அமைச்சரவையின் இறுதிப் பட்டியல் தயாராகிவிட்டதாகவும், புதன்கிழமை மாலை ராகுல் காந்தியுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் அவர் ஒப்புதல் அளித்துவிட்டால் வியாழக்கிழமை மாலை புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, கர்நாடக ஆளுநர் மாளிகைக்குப் புதிய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு வட்டரங்கள் தெரிவித்துள்ளன.
final-stage discussions regarding the expansion of the Karnataka Cabinet will be held with Rahul Gandhi.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.