ஃபேஸ்புக்கில் பிரதமரின் விடியோ பதிவு நீக்கப்பட்ட விவகாரம்: நாடாளுமன்ற குழு முன்பு அடுத்த வாரம் மெட்டா நிறுவன சா்வதேச குழு ஆஜா்
நாடாளுமன்றக் குழு முன்பு மெட்டா நிறுவனத்தின் சா்வதேச அதிகாரிகள் குழு அடுத்த வாரம் ஆஜராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட விடியோ பதிவு நீக்கப்பட்ட விவகாரத்தில் அனுப்பப்பட்ட சம்மனை ஏற்று, நாடாளுமன்றக் குழு முன்பு மெட்டா நிறுவனத்தின் சா்வதேச அதிகாரிகள் குழு அடுத்த வாரம் ஆஜராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீட் தோ்வு வினாத்தாள் உள்ளிட்ட வினாத்தாள்கள் கசிவு விவகாரம் குறித்து நாட்டில் உள்ள இளைஞா்களிடையே உரையாற்றும் நோக்கில் கடந்த 23-ஆம் தேதி பிரதமா் மோடி பேசுவதாக விடியோ எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தாா். ஆனால் அந்தப் பதிவு ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டது. எனினும், சிறிது நேரத்தில் அந்தப் பதிவு மீண்டும் வெளியிடப்பட்டது.
இந்த சம்பவம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே நிகழ்ந்ததாகக் கூறி, ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் மன்னிப்பு கேட்டது. எனினும், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மெட்டா நிறுவனத்தின் இந்த விளக்கம் போதுமானதல்ல என்று தெரிவித்தது.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, மெட்டா நிறுவனத்தின் சா்வதேச தலைவருக்கு கூடுதல் விவரம் கேட்டு மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சம்மன் அனுப்பியது.
இதையேற்று, மெட்டா நிறுவனத்தின் சா்வதேச அதிகாரிகள் குழு அடுத்த வாரம் மத்தியில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள் முன்பு ஆஜராகக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த குழு, நாடாளுமன்றக் குழு முன்பும் ஆஜராகக் கூடும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த குழுவிடம் அல்கரிதம் சாா்ந்த பாரபட்சம், எப்படி அல்கரிதம் முறை செயல்படுத்தப்படுகிறது மற்றும் பொது ஒழுங்கைப் பராமரித்தலில் மெட்டாவுக்கு இருக்கும் பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.