மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி இளைஞர் காங்கிரஸ் போராட்டம்!
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியது பற்றி...
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரியும், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஞ்சியில் உள்ள லோக் பவனுக்கு வெளியே செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் கொடுக்கப்பட்ட நீட் வினாத்தாள், தேர்வுக்கு முன்பே கசிந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், அது உறுதி செய்யப்பட்டது. எனவே அந்தத் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வுக்கான தேதியாக வரும் ஜூன் 21-ஐ தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.
இது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர், பேராசிரியர் மற்றும் பயிற்சி மைய உரிமையாளர் உள்படம் பத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரித்து வருகிறது.
Advertisement
Advertisement
இந்த சம்பவம் நிகழ்ந்த முதலே பல்வேறு தரப்பினர் மத்திய அரசைக் கண்டித்தும், தேசிய தேர்வு முகமையைக் கலைக்கக் கோரியும், மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரியும் போராட்டங்களைக் கையாண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, ராஞ்சியில் இன்று போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பேசியதாவது:
கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் இதுவரை, 89 வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும், 48 முறை மறு தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இது மிகவும் வெட்கக்கேடானது.
தங்களுடைய மகன்களை மற்றும் மகள்களை இழந்த குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். ஆனால், பாஜக அரசு இந்த விவகாரத்தில் அமைதி காக்கிறது. ஆகையால், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது காங்கிரஸ் இளைஞரணியின் கோரிக்கையாக உள்ளது என்று தெரிவித்தார்.